அதிமுக படுதோல்வி அடையும்.. எவ்வளவு கூட்டம் நடத்தினாலும் திமுகதான் ஜெயிக்கும் - ஓ.பன்னீர்செல்வம்
சென்னை: சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு குறுகிய காலமே உள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். நாம் தமிழர், தவெக கட்சிகளும் களத்தில் வேகம் காட்டி வருகிறார்கள். அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டம் மதுரையில் இன்று நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளார். அதிமுக - பாஜக எத்தனை கூட்டங்களை நடத்தினாலும் தேர்தலில் படுதோல்வியடைவார்கள் என ஓ. பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களத்தில் உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது. கூட்டணிகள், தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு வருகின்றன. மதுரையில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி மாநாட்டில் மோடி கலந்து கொள்கிறார்.

ஓபிஎஸ் விளக்கம்
திமுகவில் இணைந்துள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "முதலமைச்சர் திமுக தொண்டர்களை மட்டுமல்லாமல் அனைத்துத் தரப்பு மக்களையும் வழிநடத்தி வருகிறார். நான் திமுகவில் இணைந்திருக்கிறேன். கட்சியில் உள்ள அனைவரும் என்னை தங்களின் உடன் பிறந்த சகோதரனாக பாவித்து, அன்புடன் நல்ல வரவேற்பை கொடுத்துள்ளனர் [O Panneerselvam].
எந்த தொகுதி
தளபதி என்ன கட்டளையிடுகிறாரோ அதன்படி தான் நாங்கள் நடப்போம். என் காரில் ஜெயலலிதா அம்மா புகைப்படத்தை அகற்றியதை விமர்சிக்கிறார்கள். நான் திமுகவில் இணைந்துள்ளேன். அதனால் தலைவர் ஸ்டாலின் படம் இடம்பெறுவதில் எந்த தவறும் இல்லை. இந்த தேர்தலில் அதிமுக படு தோல்வியை சந்திக்கும். தலைவர் என்ன முடிவு செய்து எனக்கு வாய்ப்பு கொடுக்கிறாரோ அந்த தொகுதியில் நிற்பேன்.
கண்டனம்
தலைவர் என்ன திட்டத்தின்படி செயலாற்றுகிறாரோ அவருக்கு கீழ் பணியாற்ற நான் கடமைப்பட்டுள்ளேன். அதிமுக - பாஜக எவ்வளவு கூட்டங்கள் நடத்தினாலும் தேர்தலில் அவர்கள் படுதோல்வியடைவார்கள். அடித்தட்டில் உள்ள ஏழை, எளிய மக்கள் சமநோக்குடன் வாழ வேண்டும் என்று தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர் தந்தை பெரியார். அவரின் படத்தை அகற்றியிருப்பது கடும கண்டனத்திற்குரியது. எனக்கு எந்த மனப் போராட்டமும் இல்லை. திமுகவில் நான் மன மகிழ்ச்சியுடன் இணைந்திருக்கிறேன்" என்றார்.












Click it and Unblock the Notifications