சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வம் இருக்கை மாற்றம்? முக்கிய ஆலோசனை நடத்திய சபாநாயகர் அப்பாவு!
சென்னை: சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வத்தின் இருக்கை மாற்றுவது தொடர்பாக சபாநாயகர் அப்பாவு இன்று முக்கிய ஆலோசனை நடத்தியிருக்கிறார்.
எடப்பாடி பழனிசாமி தரப்பு அளித்த கடிதத்தையும், ஓ.பன்னீர்செல்வம் எழுதிய கடிதத்தையும் முழுமையாக தாமே படித்துப் பார்த்த அவர் அதன் மீது என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பது தான் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.
இதனிடையே இன்றைய நிலவரப்படி எடப்பாடி பழனிசாமி இருக்கை அருகில் தான் ஓ.பன்னீர்செல்வத்தின் இருக்கை இருக்கிறது என்பதும் இனிமேற்கொண்டு அதில் மாற்றங்கள் நிகழ வாய்ப்பு உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது.

சட்டசபை கூட்டம்
தமிழக சட்டசபை கூட்டம் வரும் 17ஆம் தேதி தொடங்கும் நிலையில் அன்றைய தினம் முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிப்பதோடு மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இரங்கல் தெரிவிக்கப்படவுள்ளது. அத்துடன் அன்றைய தினம் அவை ஒத்தி வைக்கப்பட்டு அடுத்த நாள் 18ஆம் தேதி செவ்வாய்கிழமை கூடவுள்ளது. இந்நிலையில் சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எங்கு இருக்கை ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சென்னையில் சபாநாயகர்
ஊரில் இருந்த சபாநாயகர் அப்பாவு இன்று காலை தான் சென்னை வந்திருக்கிறார். இதையடுத்து தலைமைச் செயலகத்தில் பிற்பகல் வரை இருக்கை ஒதுக்கீடு தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தியுள்ள அவர் அது தொடர்பாக இறுதி முடிவு எதையும் எடுக்கவில்லை. மீண்டும் நாளைய தினம் இது குறித்து ஆலோசித்து முக்கிய முடிவெடுக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருக்கை ஒதுக்கீடு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் மாறி மாறி கடிதம் எழுதியிருப்பது கவனிக்கத்தக்கது.

நாளை தெரியவரும்
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் ஆர்.பி.உதயகுமார் எதிர்க்கட்சி துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் அதற்கு ஓபிஎஸ் கடும் ஆட்சேபனை தெரிவித்து வருகிறார். நீதிமன்றத்தில் உள்ள உட்கட்சி விவகாரத்தை சுட்டிக்காட்டி 2 முறை கடிதம் எழுதியிருக்கிறார். நாளை மாலைக்குள் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எங்கு இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது என்ற விவரம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புறக்கணிக்க முடிவு
எடப்பாடி பழனிசாமி கடிதத்தை ஏற்று அதற்கேற்ப இருக்கையில் மாற்றம் செய்தால் ஓ.பன்னீர்செல்வம் சட்டசபையை புறக்கணிப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதேபோல் ஓ.பன்னீர்செல்வம் கடிதத்தை ஏற்று அதற்கேற்ப இருக்கையில் மாற்றம் செய்யப்படவில்லை என்றால் எடப்பாடி பழனிசாமி சட்டசபையை புறக்கணிப்பார் எனக் கூறப்படுகிறது. மொத்தத்தில் ஒருவர் நாற்காலியை இணைத்து போடுமாறும் மற்றொருவர் பிரித்து போடுமாறும் பஞ்சாயத்து செய்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications