பொதுச்செயலாளர் பதவி கூடாது; என் கையெழுத்துதான் தீர்மானிக்கும்.. இரட்டை தலைமைதான்..ஓபிஎஸ் பிடிவாதம்
சென்னை: அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் எனும் ஓபிஎஸ் தலைமையிலான அணி மீண்டும் போர்க்கொடி தூக்கி உள்ளது. அதிமுகவில் ஒற்றைத் தலைமை என்பது கூடவே கூடாது; இரட்டைத் தலைமையே தொடர வேண்டும் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்.
அதிமுகவில் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி இருக்கின்றனர். சென்னையில் வரும் 23-ந் தேதி நடைபெறும் அதிமுக பொதுக் குழுவில் அக்கட்சியின் பொதுச்செயலாளராக தமக்கு மகுடம் சூட்ட எடப்பாடி பழனிசாமி வியூகம் வகுத்துள்ளார். இதற்கு ஓ.பன்னீர்செல்வம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
கடந்த சில நாட்களாக அதிமுகவும் பெரும் புகைச்சலை கிளப்பிய இந்த விவகாரம் இப்போது வீதிக்கு வந்துள்ளது. சென்னையில் இன்று இரவு ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்து அதிமுகவில் நிலவும் குழப்பம் தொடர்பாக விளக்கம் அளித்தார். இந்த சந்திப்பில் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்த முக்கிய கருத்துகள்:
அதிமுகவில் மீண்டும் இணையும் போது கையெழுத்து அதிகாரம் கொண்ட ஒருங்கிணைப்பாளர் பதவி எனக்கு வழங்கப்படும் என முடிவெடுக்கப்பட்டது. ஆனால் 2 நாட்களில் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் கையெழுத்திடுவார் என மாற்றினார்கள். அப்போது துணை முதல்வர் பதவி அதிகாரம் இல்லாதது என்ற போதும் பிரதமர் மோடி அழுத்தம் கொடுத்ததால் ஏற்றுக் கொண்டேன்.
அதிமுகவில் இப்போதுவரை இரட்டைத் தலைமை என்பது நன்றாகவே போய்க் கொண்டிருக்கிறது. எதற்காக இந்த குழப்பம் என்பது தெரியவில்லை.
சென்னையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை அஜெண்டா இல்லை. ஆனால் என்னிடம் கலந்தாலோசிக்காமலேயே பேச செய்தனர். மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசியதை வெளியே பேசக் கூடாது என கண்டிப்பாக சொன்ன பிறகும் ஜெயக்குமார் பகிரங்கமாக பேட்டி கொடுத்ததுதான் பிரச்சனை இவ்வளவு பெரிதாகக் காரணம்.

பொதுச்செயலாளர் பதவி
அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவி என்பது தொண்டர்களால் தேர்தல் மூலம்தான் தேர்ந்தெடுக்க முடியும். அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் பதவி, ஜெயலலிதாவுக்கு கொடுக்கப்பட்டுவிட்டது. அதற்கு பொதுக்குழுவில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுவிட்டது. அதிமுகவில் என்றைக்கும் பொதுச்செயலாளர் ஜெயலலிதாதான். பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஜெயலலிதாவை மாற்றுவது என்பது அவருக்கு செய்கிற துரோகம்.

என் கையெழுத்து அவசியம்
அப்படியே பொதுச்செயலாளர் பதவியில் மாற்றம் கொண்டு வர பொதுக்குழுவில் தீர்மானம் என ஒன்று கொண்டு வந்தாலும் ஒருங்கிணைப்பாளராகிய என்னுடைய கையெழுத்து கண்டிப்பாக தேவை. ஜெயலலிதா மறைந்த போதுகூட சசிகலாவை தற்காலிகமாக மட்டும்தான் பொதுச்செயலாளராக்கினோம்.

அதிமுக உடைய கூடாது
அதிமுகவில் தொண்டர்களின் பாதுகாப்புக்காக மட்டுமே நான் இருக்கிறேன்; தொண்டர்கள் நலன்தான் எனக்கு முக்கியம். அதிமுக உடையக் கூடாது என்பதற்காக எடப்பாடி பழனிசாமி தரப்புடன் பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயாராகவே இருக்கிறோம்.

நிபந்தனை என்ன?
எங்களைப் பொறுத்தவரை அதிமுகவில் இரட்டை தலைமை என்பது தொடர வேண்டும்; எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்து தலைவர்கள், ஜெயலலிதாவுக்கு உறுதுணையாக இருந்தவர்கள் என சீனியர்களை மட்டும் கொண்ட 14 பேர் கொண்ட வழிகாட்டு குழு அமைக்க வேண்டும்... இந்த இரண்டும்தான் எங்கள் நிலைப்பாடு. அதிமுகவில் ஒற்றைத் தலைமை என்பது தேவையே இல்லாதது. இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.












Click it and Unblock the Notifications