நாங்க அப்பாயின்ட்மென்ட்டே கேட்கல.. எடப்பாடி துரோகின்னு அமித்ஷாவுக்கே தெரியும்.. புகழேந்தி காட்டம்!
சென்னை : சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஓபிஎஸ்ஸை தனிப்பட்ட முறையில் சந்திக்காமல், போகிற போக்கில் கைகுலுக்கிவிட்டுச் சென்றது விவாதங்களைக் கிளப்பியுள்ள நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி அதுபற்றி பேசியுள்ளார்.
நாங்கள் அமித்ஷாவை தனியாகச் சந்திக்க அப்பாயின்ட்மெண்ட் கேட்கவில்லை என்றும், மரியாதை நிமித்தமாகவே இந்த சந்திப்பு நடைபெற்றது என்றும் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இருக்கும் தலைவர்கள் ஒருபோதும் எடப்பாடி பழனிசாமியை நம்ப மாட்டார்கள். ஈபிஎஸ் நம்பிக்கை துரோகம் செய்பவர் என்று மோடியும், அமித்ஷாவும் தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்றும் புகழேந்தி காட்டமாக விமர்சித்துள்ளார்.

அமித்ஷா - ஓபிஎஸ் - எடப்பாடி
சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியாக சந்தித்துப் பேச நேரம் கேட்டதாக தகவல் வெளியானது. ஆனால், எடப்பாடி பழனிசாமிக்கு நேரம் கொடுக்கப்படவில்லை என்றும், ஓபிஎஸ் மட்டும் அமித்ஷாவை சந்திப்பார் என்றும் கூறப்பட்டது. அமித்ஷா உடனான சந்திப்பின் போது அதிமுக குறித்து ஓபிஎஸ் பேசுவார் இதனால் அதிமுக ஈபிஎஸ் ஓபிஎஸ் மோதல் விவகாரத்தில் திருப்பங்கள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

கைகுலுக்கிய அமித்ஷா
எனினும், அப்படியான தனிப்பட்ட சந்திப்பு எதுவும் நிகழவில்லை. இந்தியா சிமெண்ட்ஸ் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு மேடையில் இருந்து இறங்கிய அமித்ஷா, ஓ.பன்னீர்செல்வத்துடன் கைகுலுக்கினார். மரியாதை நிமித்தமாக நடந்த இந்தச் சந்திப்பின்போது இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டனர். எனினும் தனியாக சந்திக்க நேரம் ஒதுக்காதது அரசியல் அரங்கில் உன்னிப்பாக கவனிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவுக்கு இந்த நிலை
ஜெயலலிதா இருந்தபோது பாஜக தலைவர்கள் அவரைக் காத்திருந்து சந்தித்துச் செல்வார்கள். ஆனால், இப்போது ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் பாஜக தலைவர்களைச் சந்திக்கப் போராடி வருகின்றனர். டெல்லி தலைவர்கள் அதிமுக தலைவர்களைச் சந்திப்பதைப் புறக்கணிப்பதும் நடக்கிறது. பாஜகவின் அங்கீகாரத்துக்காக ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் ஏங்கித் தவிப்பதாகவும் ஒரு கருத்து எழுந்துள்ளது. அதிமுகவுக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டுவிட்டதே என தொண்டர்கள் புலம்பி வருகின்றனர்.

புறக்கணிச்சிட்டு போகல
இந்நிலையில், ஓபிஎஸ் அணியின் கொள்கை பரப்புச் செயலாளர் புகழேந்தி இதுதொடர்பாக தனியார் செய்தி தொலைக்காட்சியில் பேசும்போது, "தனியார் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் வந்தனர். நேற்று மோடி வரவேற்பு நிகழ்விலும், வழியனுப்பியபோதும் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றார். இன்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் மரியாதை நிமித்தமாகச் சந்தித்துள்ளார். அமித்ஷா ஓபிஎஸ்ஸை புறக்கணித்துவிட்டுச் செல்லவில்லை.

ஈபிஎஸ் துரோகம் டெல்லிக்கு தெரியும்
டெல்லியில் இருக்கும் தலைவர்கள் ஒருபோதும் எடப்பாடி பழனிசாமியை நம்ப மாட்டார்கள். ஈபிஎஸ் நம்பிக்கை துரோகம் செய்பவர் என்று மோடியும், அமித்ஷாவும் தெரிந்து வைத்திருக்கிறார்கள். அதனால், அவரைச் சந்திக்கவில்லை. ஓபிஎஸ் மரியாதை நிமித்தமாக அமித்ஷாவை சந்திப்பதை விமர்சிப்பதா? அமித்ஷாவை தனியாகச் சந்திக்க நாங்கள் அப்பாயின்ட்மெண்ட் கேட்கவில்லை.

எடப்பாடிக்கு மரியாதை இல்லை
பாஜகவின் டெல்லி வட்டாரம் ஓபிஎஸ்ஸுக்கு தான் மரியாதை கொடுக்கும். காரணம், அதிமுக சார்பில் லோக்சபாவில் இருக்கும் ஒரே ஒரு எம்.பியும் ஓபிஎஸ்ஸின் புதல்வர் தான். டெல்லியில் எடப்பாடி பழனிசாமி பிரதமரை சந்திக்க நேரம் கேட்டும் அவர்கள் வழங்கவில்லை. அதிமுகவை உடைத்து கட்சியை அடையத் துடிக்கும் எடப்பாடி பழனிசாமியை பிரதமர் மோடி நம்பமாட்டார்.

பாஜகவை நாங்கள் அணுகவில்லை
அன்று 4 வருடங்கள் எடப்பாடி பழனிசாமியை ஆள விட்டது பாஜக தான். பிரதமர் மோடி சொன்னதால் தான் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து செயல்பட ஒப்புக்கொண்டார். அவர் ஆதரவு கொடுக்கவில்லை என்றால் எடப்பாடி ஆட்சி கவிழ்ந்திருக்கும். இப்போதும் எங்களை சேர்த்து வைக்கச் சொல்லி நாங்கள் பாஜகவை அணுகவில்லை.

மோடியிடம் சொல்லவேண்டியது தானே
சட்டமன்றத்தில் பக்கத்து சீட்டிலேயே அமர விரும்பாமல் கொந்தளித்தீர்களே.. நேற்று ஏன் மதுரை விமான நிலையத்தில் ஓபிஎஸ் அருகில் நிற்க வேண்டும்? ஓபிஎஸ் முகத்தையே பார்க்க முடியாது என மறுக்க வேண்டியது தானே? கட்சி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பது ஓபிஎஸ் விருப்பம், பிளவுபட வேண்டும் என்பது ஈபிஎஸ் விருப்பம்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications