ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம்
மதுரை: திண்டுக்கல் வேடசந்தூர் இரட்டைக்கொலை வழக்கில் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், விசாரணை அதிகாரியின் விசித்திரமான நடைமுறைகளால் மனுதாரர்கள் மீதான குற்றச்சாட்டுகளை அரசு தரப்பு சரியாக நிரூபிக்க தவறிவிட்டது என கூறியுள்ள சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, 4 பேருக்கும் விசாரணை நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனை ரத்து செய்துள்ளது.
திண்டுக்கல் வேடசந்தூர் சேடபட்டியைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கண்ணன். இவர் தாடிக்கொம்பு பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் மகளை திருமணம் செய்தார். சில மாதங்களில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி பிரிந்தனர். இந்த முன்விரோதம் காரணமாக 17.5.2012ல் கண்ணன், அவரது உறவினர் பெரியசாமி ஆகியோர் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் முத்துகுமார், செல்வராஜ், செல்வபாண்டி, தூங்கன் என்ற உரத்தேவர் ஆகியோருக்கு திண்டுக்கல் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் 2023-ல் ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதித்தது. இந்த தண்டனையை ரத்து செய்யக்கோரி 4 பேரும் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆனந்த்வெங்கடேஷ், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு, "இந்த வழக்கை விசாரணை அதிகாரி சரியாக விசாரிக்கவில்லை. கொலையான ஒருவரின் இடது கை துண்டிக்கப்பட்டதாகவும், அந்த கை சம்பவம் நடந்த இடத்தில் இருந்ததாகவும் கூறியுள்ளனர். அதை விசாரணை அதிகாரி கைப்பற்றவில்லை. அப்படியென்றால் விசாரணை அதிகாரி குற்ற நிகழ்விடத்திற்கு சென்று எந்தப் பணியையும் மேற்கொள்ளவில்லை.
காவல் நிலையத்தில் இருந்தபடியே அனைத்து பணிகளையும் மேற்கொண்டுள்ளார். இரட்டைக் கொலை வழக்கின் விசாரணை சரியாக நடைபெறாதது வேதனையானது. சமீப காலங்களில் நாங்கள் கண்டதில் மிகவும் அலட்சியான விசாரணை இது. இரு விலைமதிப்பற்ற உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளன. பிரேதப் பரிசோதனை அறிக்கையில் கொலையான இருவர் உடலில் கடுமையான காயங்கள் இருந்ததாக கூறப்பட்டுள்ளது.
இருப்பினும் வழக்கின் முக்கிய சாட்சிகள் வேண்டும் என்றே விசாரணைக்கு தவிர்க்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி வாக்குமூலமும் பதிவு செய்யவில்லை. விசாரணை அதிகாரியின் விசித்திரமான நடைமுறைகளால் மனுதாரர்கள் மீதான குற்றச்சாட்டுகளை அரசு தரப்பு சரியாக நிரூபிக்க தவறிவிட்டது.
சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரியிடம் பணி விதிகள் அடிப்படையில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மனுதாரர்கள் 4 பேருக்கும் விசாரணை நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனை ரத்து செய்யப்படுகிறது. வேறு வழக்குகள் இல்லாமல் இருந்தால் 4 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்" என உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications