ரஜினிகாந்த் சந்திப்பு கையோடு காஞ்சிபுரத்தில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் புரட்சி பயணம் இன்று தொடக்கம்!
சென்னை: அண்ணா திமுகவில் சட்டப் போராட்டம் நடத்தி தோல்வி அடைந்த அக்கட்சியின் முன்னாள் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தமது ஆதரவாளர்களை சந்திக்க (புரட்சி பயணம்) இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் பயணம் மேற்கொள்கிறார். ஓ.பன்னீர்செல்வம் காஞ்சிபுரத்தில் இருந்து தமது பயணத்தை தொடங்குகிறார்.
அண்ணா திமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே மோதல் வெடித்தது. ஒரு கட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார் என எடப்பாடி பழனிசாமி அணி அறிவித்தது. இது தொடர்பாக பல்வேறு வழக்குகள், மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணைகள் உச்சநீதிமன்றம் வரை நடைபெற்றது. தற்போதைய நிலையில் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி கைதான் ஓங்கி இருக்கிறது. இதனால் அதிமுகவில் ஓபிஎஸ் அத்தியாயம் முடிவுக்கு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில்தான் தமது ஆதரவாளர்களை சந்திக்க இன்று முதல் தமிழ்நாடு தழுவிய பயணத்தை மேற்கொள்கிறார் ஓ.பன்னீர்செல்வம். காஞ்சிபுரத்தில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் தமது பயணத்தை தொடங்க உள்ளார்.
காஞ்சிபுரம் பொதுக் கூட்டத்தில் தனிக்கட்சி தொடங்குவது உள்ளிட்ட ஏதேனும் முக்கிய அறிவிப்புகளை ஓ.பன்னீர்செல்வம் வெளியிடக் கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக நேற்று திடீரென நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து பேசினார் ஓ.பன்னீர்செல்வம். தமிழ்நாடு முழுவதுமான தமது சுற்று பயணத்துக்கு ரஜினிகாந்த் ரசிகர்கள் ஆதரவு தர வேண்டும் என இச்சந்திப்பின் போது ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனால் ரஜினிகாந்த், அவரது பயணத்துக்கு வாழ்த்து மட்டும் தெரிவித்து அனுப்பி வைத்தார்.
முன்னதாக காஞ்சிபுரம் மாநாட்டில் ஓ.பன்னீர்செல்வம், அம்மா மக்கள் அண்ணா திமுக கட்சியை தொடங்குவதற்கான அறிவிப்பை வெளியிடுவார் என தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால் தற்போது வரை ஓ.பன்னீர்செல்வம் தரப்பு இது தொடர்பாக உறுதியான எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.












Click it and Unblock the Notifications