திருச்செந்தூர் முருகனை வழிபட்ட ஓ.பன்னீர் செல்வம்.. சத்ரு சம்ஹார மூர்த்தியிடம் பலமான வேண்டுதல்
சென்னை: அரசியல் பரபரப்புக்கு இடையே ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ளார் ஓ.பன்னீர் செல்வம். அதிமுகவின் கட்சி, கொடி, சின்னம் வழக்கில் தீர்ப்பு வர உள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் திருச்செந்தூர் சுப்பிரமணியர் ஆலயத்தில் தரிசனம் செய்துள்ளார். விஸ்வரூப தரிசனம், அபிஷேகத்தில் பங்கேற்ற ஓ.பன்னீர் செல்வம், சத்ரு சம்ஹார மூர்த்தியிடம் பலமான வேண்டுதல் வைத்துள்ளாராம்.
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவில் சிறந்த பரிகார ஸ்தலமாக விளங்குகிறது.இதனால் அரசியல் கட்சி பிரமுகர்கள் தொழில் அதிபர்கள் பல்வேறு யாகங்கள் வளர்த்து சுப்ரமணியசுவாமியை வழிபட்டு செல்கின்றனர்.

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வம் அணியினர் கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி அணியினர் நீதிமன்றம் வாயிலாக சட்டப்போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
அடுத்த மாதம் 19ம் தேதி தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற இரு அணியினரும் தீவிர முயற்சி செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த விவகாரத்தில் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்க உள்ளது.
நீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் திருச்செந்தூர் சுப்பிரமணியர் ஆலயத்தில் சிறப்பு தரிசனம் மேற்கொண்டார். இன்று அதிகாலை கோவிலில் நடைபெற்ற விஸ்வரூப தரிசனம், அபிஷேகத்தில் ஓ.பி.எஸ் ஆதரவாளர்களுடன் சுவாமி தரிசனம் செய்தார்.
பின்னர் அவர் சத்ரு சம்கார மூர்த்தி சன்னதிகளில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டார். தொடர்ந்து காலை 6 மணிக்கு மூலவருக்கு நடத்த அபிஷேகத்தில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தார். சுவாமி தரிசனம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ஓ.பன்னீர் செல்வம் கூறுகையில், உலக மக்கள் நலம் பெற சுவாமி தரிசனம் செய்ததாக பதிலளித்தார். அரசியல் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை தவிர்த்து விட்டார் ஓ.பன்னீர் செல்வம்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு ஏற்படுத்தி தனி அணியாக செயல்பட்டு வருகிறார். தன்னை கட்சியில் இருந்து நீக்கியது செல்லாது என அவர் தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இரட்டை இலை சின்னம், கட்சியின் கொடியை ஓ.பன்னீர்செல்வம் அணியினர் பயன்படுத்தக் கூடாது என எடப்பாடி பழனிசாமி தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகவுள்ளது. இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் திருச்செந்தூரில் சாமி தரிசனம் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications