தனிக்கட்சி ஆரம்பிக்கிறீங்களா? வந்து விழுந்த கேள்வி.. "சஸ்பென்ஸ்" கொடுத்த ஓ பன்னீர் செல்வம்
சென்னை: முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்திடம், தனிக்கட்சி ஆரம்பிக்க இருப்பதாக செய்திகள் பரவுவது பற்றி செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு சிரித்தபடியே, பொறுமையாக இருங்கள் என கூறிவிட்டு ஓபிஎஸ் சென்றார்.
அதிமுகவில் ஒற்றைத்தலைமை கோஷம் வலுக்கத் தொடங்கியதும் தலைமை பதவியை கைப்பற்றுவதில் ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே கடும் போட்டி நிலவியது. இந்த ரேசில் முந்திய எடப்பாடி பழனிசாமி கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி பொதுக்குழுவை கூட்டி தனது பலத்தை நிரூபித்தார். அதிமுகவை முழுமையாக தனது கட்டுக்குள் கொண்டு வந்ததோடு, ஓ பன்னீர் செல்வம் உள்பட வைத்தலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களையும் கட்சியில் இருந்து நீக்குவதாக எடப்பாடி தரப்பு தெரிவித்தது.

இதற்கு எதிராக ஒ பன்னீர் செல்வம் தொடர்ந்து சட்ட போராட்டங்கள் நடத்தினர். இதில் எடப்பாடி பழனிசாமிக்கே அடுத்தடுத்து சாதகமாக தீர்ப்பு வந்தது. இதனால், கட்சியை முழுமையாக தனது கட்டுக்குள் வைத்துக் கொண்ட எடப்பாடி பழனிசாமி அண்மையில் மதுரையில் மாநில மாநாடு ஒன்றையும் நடத்தி தனது செல்வாக்கை காட்டினார். நீதிமன்ற தீர்ப்புகளால் பின்னடவை சந்தித்து இருக்கும் ஓ பன்னீர் செல்வம் தனது ஆதரவு மாவட்ட செயலாளர்களுடன் அண்மையில் ஆலோசனை நடத்தினார்.
தொடர்ந்து ஒருபக்கம் நிர்வாகிகளையும் நியமித்து வருகிறார். இதற்கிடையே, டிடிவி தினகரனுடன் கைகோர்த்துள்ள ஓ பன்னீர் செல்வம் வரும் காலத்தில் அவருடன் இணைந்து பயணிப்பேன் என்றார். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் யார் வேண்டுமானாலும் திரும்பி வரலாம் எனவும் ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகிய மூன்று பேருக்கும் மட்டும் இடம் கிடையாது என எடப்பாடி தரப்பு திட்டவட்டமாக கூறி வருகிறது.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஓபிஎஸ் - டிடிவி தினகரன் நிலைப்பாடு என்ன? தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெறுவார்களா? அப்படி இடம் பெற்றாலும் அதை அதிமுக ஏற்றுக்கொள்ளுமா? என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக உள்ளது. இதனிடையே, புரட்சி தொண்டன் என்ற பத்திரிக்கையை ஆரம்பித்து இருக்கும் ஓ பன்னீர் செல்வம் தொடர்ந்து தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
இதனால், ஓ பன்னீர்செல்வத்தின் அடுத்த கட்ட மூவ் என்னவாக இருக்கும் என்பது அரசியல் வட்டாரத்தில் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் தான் இன்று விமான நிலையத்தில் ஓ பன்னீர் செல்வத்திடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். குறிப்பாக நீங்கள் தனிக்கட்சி தொடங்க இருப்பதாக செய்தித்தாள்களில் செய்திகள் வந்துள்ளன? அதற்கு வாய்ப்பு இருக்கா? என்று செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு சிரித்தபடியே ஒபிஎஸ் சென்றார். அப்போது, செய்தியாளர்கள் தனிக்கட்சி ஆரம்பிக்க போவதாக வரும் கேள்விகளுக்கு உங்கள் பதில் என்னவாக இருக்கும் என்று கேட்டனர். இதற்கும் 'சஸ்பென்ஸ்" என்று ஒரே வரியில் பதிலளித்து விட்டு சஸ்பென்ஸ் வைத்து விட்டு சென்றார். தொடர்ந்து செய்தியாளர்கள் தனிக்கட்சி தொடர்பாக கேள்வி எழுப்பிய போது, பொறுமையாக இருந்து பாருங்கள் என சொல்லிவிட்டு கிளம்பினார்.












Click it and Unblock the Notifications