சசிகலாவை வாழ்த்தியது ஏன் தெரியுமா..? ஓபிஎஸ் மகன் ஜெய பிரதீப் சொன்ன விளக்கத்தை பாருங்க!
சென்னை: சசிகலா உடல்நலம் பெற வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்தது ஏன் என்பது பற்றி தமிழக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் இரண்டாவது மகன் ஜெய பிரதிப் விளக்கம் அளித்துள்ளார்.
Recommended Video

சசிகலா தமது முதல்வர் பதவியை பறித்துவிட்டாரே என்கிற கொந்தளிப்பில் ஜெயலலிதா சமாதியில் தியானம் நடத்தி "தர்மயுத்தம்" என்ற பெயரில் அதிரடி காட்டியவர் ஓ.பன்னீர் செல்வம்.
முதல்வர் எடப்பாடி தலைமையிலான அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் ஓபிஎஸ், அவரது ஆதரவு 11 எம்.எல்.ஏக்கள் எதிராக வாக்களித்தனர்.
இதனால் ஓபிஎஸ் அரசியலில் சசிகலாவின் முதல் எதிரியாக மாறினார். சசிகலாவால் கூட்டப்பட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் வைத்துதான், முதல்வரானார் எடப்பாடி பழனிசாமி. இது சசிகலா 4 ஆண்டுகளுக்கு முன்னர் சிறைக்குப் போகும் போது இருந்த நிலை.

ஓபிஎஸ் தரப்பு
இப்போது காலமும் காட்சிகளும் மாறிவிட்டன. சசிகலா 4 ஆண்டு சிறை தண்டனை முடிந்து விடுதலையாகிவிட்டார். ஆனால் சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்க்கவேமாட்டோம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதியாக சொல்கிறார். ஓபிஎஸ் தரப்பில்தான் இன்னும் அதிரடி கருத்து வந்து விழவில்லை.

ஓபிஎஸ் மகன் வாழ்த்து
இந்த நிலையில்தான், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வத்தின் மகன் ஜெய பிரதீப், சசிகலா நலம்பெற வேண்டும் என ஒரு அறிக்கை வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர் அடித்த அதிமுக பிரமுகர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனரே. அப்படியானால், ஜெய பிரதீப் மீதும் நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்விகள் எழுந்தன.

சுப்பிரமணிய சுவாமி தரிசனம்
இந்த நிலையில்தான், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு இன்று சாமி தரிசனம் செய்ய வந்திருந்தார் ஜெய பிரதீப். அப்போது அவரிடம் நிருபர்கள், இந்த வாழ்த்து குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ஜெய பிரதீப், மூன்றாவது முறையாக அதிமுக ஆட்சி அமைக்க வேண்டி சுவாமி தரிசனம் செய்து வருகிறேன். மனமுருகி வேண்டினால், திருச்செந்தூர் செந்திலாண்டவன் கைவிட மாட்டார். அந்த நம்பிக்கை எனக்கு உள்ளது.

மனிதாபிமானம்
எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களுக்கு மலர் அலங்காரம் செய்வது என் கடமை என தெரிவித்தார். மேலும் பேசிய அவர்,மனிதாபிமான அடிப்படையிலேயே சசிகலா உடல் நலம் பெற ட்விட்டரில் பதிவு செய்தேன். அதில் எந்த அரசியலும் இல்லை. என தெரிவித்தார்.

திருச்செந்தூர் கோவில்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மூலவர் சுப்பிரமணியசுவாமி, உற்சவர் சண்முகர் சந்நிதியில் சுமார் 20 நிமிடங்கள் ஜெய பிரதீப் வேண்டிக் கொண்டு இருந்தார். உள்பிரகாரத்திலுள்ள சத்ருசம்ஹார மூர்த்தி சந்நிதியில், சத்ருசம்ஹார மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் செய்து பூஜைகளில் கலந்து கொண்டார். சுமார், ஒன்றரை மணி நேரம் வரை அந்த சிறப்பு பூஜை நடைபெற்றது.












Click it and Unblock the Notifications