ஒடிஷா ரயில் விபத்து: 137 பயணிகள் சென்னை வந்தனர்- தமிழ்நாட்டை சேர்ந்தவர் யாரும் உயிரிழக்கவில்லை!
சென்னை: ஒடிஷா ரயில்கள் விபத்தில் சிக்கிய 137 பயணிகள் சிறப்பு ரயில் மூலம் இன்று அதிகாலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்தனர். 137 பேரில் 8 பேருக்கு லேசான காயம் இருந்தது. அதிதீவிர காயங்களுடன் யாரும் வரவில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
ஒடிஷாவின் பாலசோர் ரயில்கள் விபத்தில் சிக்கி 294 பேர் மரணம் அடைந்துள்ளனர். மேலும் 750 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஹவுரா எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில்கள் மோதி இந்த பெரும் விபத்து ஏற்பட்டது. உலகையே அதிரவைத்துள்ளது இந்த கோர ரயில் விபத்து.

ரயில் விபத்துகளில் சிக்கியவர்களை மீட்டு சொந்த மாநிலங்களுக்க் அனுப்பி வைக்க அம்மாநிலங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் குழு ஒடிஷாவில் முகாமிட்டுள்ளது. தமிழ்நாட்டு அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் ,சிவசங்கர் உள்ளிட்டோர் தலைமையிலான குழுவும் ஒடிஷாவில் முகாமிட்டிருக்கிறது.
ஒடிஷா ரயில்கள் விபத்தில் சிக்கிய தமிழ்நாட்டு பயணிகள் அடையாளம் காணப்பட்டு சென்னைக்கு சிறப்பு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த பயணிகள் ரயில் இன்று அதிகாலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்தது. சென்னை சென்ட்ரலில் ரயில் பயணிகளை அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், மா.சுப்பிரமணியன் வரவேற்றனர். 137 பேரில் காயமடைந்த 8 பேர் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மற்றும் ராணுவ வீரர் அனீஷ் உள்ளிட்டோரும் அடங்குவர். 100-க்கும் மேற்பட்டோருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டிருந்தன.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்த விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் இறந்ததாக இதுவரை எந்த தகவலும் இல்லை என்றார்.
#WATCH | Tamil Nadu: Some of the survivors of #BalasoreTrainAccident, arrive at Chennai railway station on a special train from Odisha pic.twitter.com/z7K4VujoHn
— ANI (@ANI) June 3, 2023
முன்னதாக ரயிலில் வரும் பயணிகள் படுகாயம் அடைந்திருந்தால் அவர்களை உடனடியாக மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மேலும் பயணிகளை வீடுகளுக்கு அழைத்து செல்ல சிறப்பு வாகனங்களையும் தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்திருந்தது.












Click it and Unblock the Notifications