ஆட்டோக்களில் பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்ல தடை வருமா? போக்குவரத்து & பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை!
சென்னை: பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்லும் ஷேர் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை மற்றும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு, தனியார் பள்ளிகள் அனைத்தும், கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் மாதம் திறக்கப்பட உள்ளன. இதை முன்னிட்டு, வாகனங்களின் பாதுகாப்பு குறித்த ஆய்வு முகாம்கள் அந்தந்த பகுதி ஆர்.டி.ஓக்கள் தலைமையில் நடைபெற்று வருகின்றன. அப்போது பள்ளி வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.

பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன்பாக, மாணவர்களின் பாதுகாப்பு கருதி வாகனங்களின் உறுதி தன்மை குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, வாகனங்களில் மஞ்சள் பெயின்ட், பள்ளியின் பெயர் முத்திரை, தொலைபேசி எண், டிரைவர் கேபின், கால் பலகை, தீ தடுப்பு உபகரணம், பக்கவாட்டு தடுப்புக் கம்பிகள், அவசர கால வழி, வேகத் தடுப்பு கருவி, ஹாரன் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் சரிவர உள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், அனைத்து வாகன ஓட்டுனர்களுக்கும், வாகனங்களை பாதுகாப்பாக இயக்குவது குறித்தும், பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு குறித்தும், அவசர காலங்களில் அளிக்கப்பட வேண்டிய உயிர்காக்கும் சிகிச்சைகள் குறித்தும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மற்றும் தனியார் மருத்துவமனை குழு மூலமாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், பள்ளிகளின் அனுமதி இன்றியும் போக்குவரத்துத் துறை அனுமதியின்றியும் ஷேர் ஆட்டோக்களில் மாணவர்களை அழைத்துச் செல்லும் நிலை உள்ளது. பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்லும் ஷேர் ஆட்டோக்கள் விபத்தில் சிக்கும் செய்திகள் அதிகரித்து வருவதன் காரணமாக, ஆட்டோக்களில் பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்ல தடை விதிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆட்டோக்களில் அதிக அளவிலான மாணவர்களை ஏற்றிச் செல்வதால் தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு மாணவர்கள் பாதிக்கப்படும் சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில், ஷேர் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக பள்ளிகல்வித்துறை மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications