சென்னை ஈசிஆரில் ரூ.2 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு.. 39 வீடுகளுக்கு சீல் வைக்க முடிவு
சென்னை: சென்னையை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சூளேரிக்காடு குப்பத்தில் ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான ரூ.2 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது. மேலும் ஆக்கிரமிப்பில் உள்ள 39 வீடுகளுக்கு 'சீல்' வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது
சென்னையை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் ஆளவந்தார் அறக்கட்டளைக்கு 1,200 ஏக்கர் நிலங்கள் உள்ளன. இந்த நிலங்கள் எல்லாம் மாமல்லபுரம் சாலவான்குப்பம் முதல் திருவிடந்தை வரை நெம்மேலி, பட்டிபுலம், பேரூர், சூளேரிக்காடு பகுதிகளில் இருக்கிறது.

சூளேரிக்காடு மீனவர் குப்பத்தில் அந்த பகுதியை சேர்ந்த ஒருவர், ஆளவந்தார் அறக்கட்டளையின் ரூ.2 கோடி மதிப்புள்ள 20 சென்ட் நிலத்தை ஆக்கிரமித்து பிரமாண்ட கட்டிடம் கட்டி இறால் பண்ணை அமைத்திருக்கிறார். சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் அவருக்கு பலமுறை நோட்டீஸ் கொடுத்து கால அவகாசம் வழங்கியும் இடத்தை காலி செய்ய மறுத்துவிட்டார்.
இதனால் நேற்று இந்து சமயஅறநிலையத்துறை, வருவாய்துறை அதிகாரிகள் போலீசாருடன் சென்று ஆக்கிரமிப்பு கட்டிடத்தில் உள்ள பொருட்களை வெளியே தூக்கி போட்டு, அதனை பூட்டி 'சீல்' வைத்தனர். பின்னர் மீட்கப்பட்ட அந்த இடத்தில், இது இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான இடம் என்று எச்சரிக்கை பலகை வைத்தார்கள்.
இதேபோல் சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் சூளேரிக்காடு மீனவர் குப்பத்தில் ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்ட 39 வீடுகளுக்கு 'சீல்' வைக்க அதிகாரிகள் சென்றனர். அப்போது குடியிருப்புவாசிகள், மீனவர்கள் முற்றுகையிட்டு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது மீனவர்கள் தங்களுக்கு வீடுகளை காலி செய்ய மேலும் கால அவகாசம் வேண்டும் என்றனர். இதனால் அதிகாரிகள் யாரும் வசிக்காத ஒரு வீட்டுக்கு மட்டும் 'சீல்' வைத்துவிட்டு, மற்ற 38 வீடுகளுக்கு 'சீல்' வைக்காமல் திரும்பி சென்றனர்.












Click it and Unblock the Notifications