விடியற்காலையிலேயே அதிரடி.. சென்னை தியாகராய நகரில் உள்ள பிரபல கடைகளுக்கு சீல்.. ஏன் தெரியுமா?
சென்னை: சென்னை தியாகராய நகரில் உள்ள பிரபல கடைகள் உள்பட பல்வேறு கடைகள் சொத்து வரி செலுத்தாதன் காரணமாக சீல் வைக்கப்பட்டுள்ளன. விடிந்த உடனேயே வந்த அதிகாரிகள், மொத்தம் 38 கடைகளுக்கு சீல் வைத்ததுடன், நோட்டீஸ் ஒட்டிவிட்டு சென்றுள்ளனர்.
சென்னை மாநகராட்சி வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 15 மண்டலங்களிலும்சொத்துவரியை வசூலிப்பதில் மாநகராட்சி தீவிரமாக இறங்கி உள்ளது. அதேநேரம் நீண்ட காலமாக சொத்துவரி செலுத்தாத நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கையிலும் இறங்கி உள்ளனர்.

சென்னையில் 4 லட்சம் வணிக கட்டிடங்கள், 8 லட்சம் வீடுகள் என மொத்தம் 12 லட்சம் சொத்துகளுக்கு வரி வசூலிக்கப்படுகிறது. கடந்த நிதியாண்டிற்கு ரூ.1600 கோடி சொத்து வரி இலக்காக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கடந்த நிதியாண்டில் மொத்தம் ரூ.1800 கோடி சொத்து வரி வசூலிக்கப்பட்டுள்ளது. இது அதற்கு முந்தைய நிதியாண்டை விட ரூ.227 கோடியே 20 லட்சம் அதிகமாகும். இதேபோன்று தொழில் வரி ரூ.533 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சொத்து வரி செலுத்தாமல் இருப்பவர்களுக்கு நோட்டீஸ் செல்போன் வழியாக எஸ்.எம்.எஸ். அனுப்பப்பட்டது. அதேபோல் நீண்ட காலமாக சொத்து வரி செலுத்தாமல் நிலுவையில் உள்ளவர்களுக்கு நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டது. அத்துடன் சென்னை மாநகராட்சிக்கு நீண்ட காலமாக சொத்து வரி செலுத்தாமல் பல லட்சங்களை நிலுவையில் வைத்துள்ள வணிக நிறுவனங்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டும் வருகிறது. நீண்டகாலமாக வசூல் ஆகாமல் உள்ள வணிக கட்டிடங்களை ஜப்தி செய்யும் நடவடிக்கையிலும் அதிகாரிகள் இறங்கி உள்ளார்கள்.
அதன்படி இன்று விடியற்காலையிலேயே களம் இறங்கிய மாநகராட்சி அதிகாரிகள், சென்னை தி.நகர், பாண்டி பஜார், உஸ்மான் சாலை உள்ளிட்ட பல இடங்களில் சொத்து வரி செலுத்தாத ஏராளமான கடைகளுக்கு சீல் வைத்து நோட்டீஸ் ஒட்டி சென்றுள்ளனர். தியாகராய நகரில் மட்டும் 38 கடைகளில் மொத்தமாக 90 லட்சம் ரூபாய் சொத்து வரி செலுத்தாமல் இருந்தனர். சொத்து வரியை செலுத்த வேண்டும் என பலமுறை நோட்டீஸ் கொடுத்தும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. தற்பொழுது வரை சொத்து வரி நிலுவையில் இருந்த காரணத்தால் சீல் வைக்கும் நடவடிக்கை எடுத்துள்ளார்களாம்.
சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களிலும் நிலுவையில் உள்ள சொத்து வரியை வசூலிக்கும் பணியை மாநகராட்சி அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள். இன்று சென்னை தியாகராய நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள சண்முகா ஸ்டோர்ஸ் 35 லட்சம் ரூபாய் சொத்து வரி நிலுவை தொகை வைத்துள்ளதாக அக்கடைக்கு சீல் வைக்கப்பட்டிருக்கிறது.. அதேபோல் சரவணா ஸ்டோர்ஸ் கடையின் சொத்து வரி நிலுவைத் தொகை 30.25 லட்சம் ரூபாய் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். சொத்துவரி பாக்கியை உடனடியாக செலுத்த வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications