கொள்ளையோ கொள்ளை... தொடர் விடுமுறை மற்றும் தேர்தல்.. கட்டணத்தை அடித்து தூக்கும் ஆம்னி பஸ்கள்!
சென்னை: தேர்தல் மற்றும் தொடர் விடுமுறை வருவதால் ஆம்னி பேருந்துகள் கட்டணங்களை ஆயிரக்கணக்கில் அதிகரித்துள்ளன.
"சென்னை வாழவைத்தது சென்னை" என்று கூறுவோரின் எண்ணிக்கை இன்று பல லட்சங்களில் இருக்கிறது. இவர்கள் அனைவரும் வெளிமாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களை சார்ந்தவர்கள். சென்னையின் மக்கள் தொகையில் ஏறத்தாழ 90% வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களை சார்ந்தவர்கள்தான்.
இவர்கள் அனைவருமே தீபாவளி, பொங்கல் மற்றும் கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை காலங்களில் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அப்போது ஆம்னிப் பேருந்துகள் தங்களது கட்டணத்தை இருமடங்கு மும்மடங்கு என உயர்த்துவது வழக்கம். இப்படி கட்டணம் உயர்த்தப் படும்போதெல்லாம் அதிகாரிகளும் அமைச்சர் பெருமக்களும் நாங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட் என்று கூறிக் கொண்டு சோதனைகளில் ஈடுபடுவதாக கூறிக் கொள்வார்கள்.

அறிந்தே நடக்கும் கொள்ளை
சில பேருந்துகளுக்கு அபராதமும் விதிக்கப்படும். ஆனால் அனைத்து ஆம்னிப் பேருந்துகளும் பயணிகளிடம் இருந்து கட்டணத்தை மறைமுகமாக வசூலிப்பதில்லை. என்ன கட்டணம் வசூலிக்கிறோம் என்பதை நேரடியாக இணையதளங்களில் அறிவித்தே வசூலிக்கிறார்கள். பயணிகளுக்கு தெரியும் இந்த கட்டண விவரங்கள் அதிகாரிகளுக்கும் அமைச்சர் பெருமக்களுக்கும் ஏனோ தெரிவதில்லை பாவம்.

தொடர் விடுமுறை
இந்த நிலையில் நாளை முதல் அரசு விடுமுறை தொடங்குகிறது. நாளை மகாவீர் ஜெயந்தியும், அதற்கு அடுத்த நாள் மக்களவை தேர்தலுக்காக அரசு விடுமுறையும் அதற்கு அடுத்த நாள் புனித வெள்ளியை முன்னிட்டு அரசு விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது அதன் பிறகு சனி மற்றும் ஞாயிறு வந்து விடுகிறது என்பதால் தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறை கிடைத்து விடுகிறது.

சொந்த ஊர்களுக்குப் படையெடுப்பு
இந்த விடுமுறைக்காக தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வோர் ஒருபுறம் என்றால் உணமையாகவே தங்களது ஜனநாயக கடமைகளை ஆற்ற நினைப்போர் வாக்களிக்க ஊர்களுக்கு செல்கின்றனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஆம்னிப் பேருந்துகள் தங்களது கட்டணத்தை மும்மடங்கு உயர்த்தி உள்ளது.

போகாமல் இருக்கலாமா
வழக்கமாக சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு ரூ. 600 லிருந்து கட்டணம் ஆரம்பிக்கும். ஆனால் இப்போது ஆம்னிப் பேருந்துகளில் கட்டணம் ரூ. 2000 தை தாண்டியுள்ளது. இதனால் உண்மையில் வாக்களிக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள் கூட இந்த கட்டணக் கொள்ளையால் பயந்து ஊருக்கு செல்வதை தவிர்த்து விடலாமா என்று யோசித்து வருகின்றனர்.

மக்களுக்கு உதவுமா அரசு
ஆம்னிப் பேருந்துகள் பயணிகளிடம் மறைமுகமாக இந்த கட்டணங்களை வாங்கினால் அரசு அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்து அவர்களை பிடிக்கலாம் ஆனால் அனைத்து ஆம்னிப் பேருந்துகளும் இதுதான் எங்களது கட்டணம் என்று இணையதளத்தில் அறிவித்தே கட்டணம் வசூலிக்கின்றனர். இப்படி அனைத்து விவரங்களும் தெரிந்தும் அரசு இந்த கட்டண கொள்ளை விவகாரத்தில் என்ன செய்யப் போகிறது என்பதுதான் சாதாரண வாக்காளனிடம் இருக்கும் கேள்வி .












Click it and Unblock the Notifications