கிளாம்பாக்கத்திற்கு நோ சொல்லும் ஆம்னி பஸ் உரிமையாளர்கள்! கோயம்பேட்டில் இருந்தே செல்லும் என அறிவிப்பு
சென்னை: கோயம்பேட்டில் இருந்தே ஆம்னி பேருந்துகள் செல்லும் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளனர்.
கோயம்பேட்டில் இருந்து புறநகர் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்த நிலையில், அங்கே கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து கிளாம்பாக்கத்தில் புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி அங்கே கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டு, கடந்த டிச. மாதம் இந்த புதிய பேருந்து நிலையத்தை முதல்வர் தொடங்கி வைத்தார். படிப்படியாக அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே கோயம்பேட்டில் இருந்தே ஆம்னி பேருந்துகள் செல்லும் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். கிளாம்பாக்கத்தில் மெட்ரோ, புறநகர் ரயில் நிலையம் வரும் வரை இதே நிலை இருக்கும் என்றும் ஜிஎஸ்டி சாலையை கடந்து கிளாம்பாக்கம் வர மக்கள் சிரமப்படுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
ஆம்னி பேருந்துகள்: இதற்கிடையே சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மெட்ரோ ரயில் நிலையம் புறநகர் ரயில் நிலையம் மாநகர பேருந்து சேவைகள் அனைத்தும் வரும் வரை ஆம்னி பேருந்துகள் அனைத்தும் கோயம்பேட்டிலிருந்து புறப்பட்டு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குள் சென்று பயணிகளை ஏற்றிச் செல்லும் என்று தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள், "கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம் சென்னையின் மையப்பகுதியாக அமைந்துள்ளது. மெட்ரோ ரயில், புறநகர் ரயில், புறநகர் மற்றும் மாநகர பேருந்து சேவை, ஷேர் ஆட்டோ என்று அனைத்து விதமான இணைப்பு வசதிகள் இருந்தது. இதனால் பொதுமக்கள் சுலபமாக வந்து செல்ல முடிந்தது.
கிளம்பாக்கம்: ஆனால், கிளாம்பாக்கத்திற்கு பொதுமக்கள் வந்து செல்ல மெட்ரோ ரயில், புறநகர் ரயில், மாநகரப் பேருந்து சேவை உள்ளிட்ட வசதிகள் இல்லை. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிப்படுகின்றனர். மேலும், ஒரே நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குள் நிறுத்தவும் அல்லது பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும் பணிமனை கிடையாது.
எனவே, இந்த அனைத்து வசதிகளும் முதலில் அங்கே வரட்டும். கிளாம்பாக்கத்திற்கு இந்த வசதிகள் வந்து சேரும் வரை கோயம்பேட்டில் இருந்து தான் ஆம்னி பேருந்துகளை இயக்க உள்ளோம். இப்போது கிளாம்பாக்கம் வரப் பொதுமக்கள் ஓலா, ஊபர் மற்றும் ஆட்டோ பயன்படுத்த ஆயிரம் ரூபாய் முதல் 1500 வரை செலவாகிறது..
ஜிஎஸ்டி சாலை: மேலும், ஜிஎஸ்டி சாலைக்கு எதிரே கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமைந்துள்ள நிலையில், ஜிஎஸ்டி சாலையின் கடந்து பேருந்து நிலையத்திற்குள் செல்ல சிரமமாக இருக்கிறது. எனவே தமிழ்நாடு அரசு இதைக் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். பேருந்தில் பயணிக்கும் 40% மக்கள் தாம்பரத்தைத் தாண்டி கிண்டி, அசோக் நகர், கோயம்பேடு வரக்கூடிய பயணிகளாக இருக்கிறார்கள். அவர்கள் வசதியையும் நாங்கள் பார்க்க வேண்டிய சூழல் உள்ளது.
அதுமட்டுமல்லாமல் மாநகருக்குள் ஆம்னி பேருந்துகள் வந்து செல்ல உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு எங்களிடம் இருக்கிறது. எனவே அரசு இதையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications