ஜோசியம் பார்ப்பதில் விஜயகாந்துக்கு ஆர்வம்! அலங்காநல்லூரில் ஆஸ்தான ஜோதிடர்! கேப்டனின் மதுரை காலம்!
சென்னை: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு ஜோசியம் பார்ப்பதில் மிகுந்த ஆர்வம் இருந்ததாக அவருக்கு முதல்முறையாக சினிமா ஸ்டில்ஸ் எடுத்துக் கொடுத்த மதுரையை சேர்ந்த புகைப்பட கலைஞர் ஆசைத்தம்பி கூறியிருக்கிறார்.
அலங்காநல்லூரில் சுந்தர ஆனந்த் என்ற ஜோதிடர் அப்போது இருந்ததாகவும் அவரிடம் கேட்ட பிறகே விஜயகாந்த் சினிமா தொடர்பான ஒவ்வொரு முடிவையும் எடுப்பார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். படம் பூஜை போடுவது முதல் எல்லா விவகாரங்கள் குறித்தும் அலங்காநல்லூரில் இருந்த ஆஸ்தான ஜோதிடரிடம் விஜயகாந்த் கலந்து பேசுவார் எனவும் கூறினார். இதெல்லாம் நடந்தது விஜயகாந்தின் ஆரம்பக்கால சினிமா நாட்களில் என்றும் அதன் பிறகு அவர் பிஸியாகிவிட்டதால் அவர் மதுரைக்கு எப்போதாவது வரத் தொடங்கியதாக ஃபிளாஷ்பேக் பகிர்ந்துள்ளார் போட்டோகிராபர் ஆசைத்தம்பி.

ஸ்டூடியாவுக்குள் வந்தால் சிகெரெட் பிடிக்கக்கூடாது என தாம் கூறியதை விஜயகாந்த் கேட்டுக்கொள்வார் என்றும் இரவு 10 மணிக்கு போட்டோ ஷூட் வைத்துக் கொள்ளலாம் எனக் கூறினால் மாலை 6 மணிக்கே விஜயகாந்த் ஸ்டூடியோவில் வந்து அமர்ந்துக்கொள்வார் எனவும் அது ஒரு காலம் என்றும் பழைய நினைவலைகளை ஓட விட்டார் ராசி ஸ்டூடியோ புகைப்பட கலைஞர் ஆசைத்தம்பி.
தன்னிடம் சினிமா ஸ்டில்ஸ் எடுப்பதற்கு முன்னர் விஜயகாந்த் வேறு யாரிடமோ எடுத்தார் என்றும் அது சரியாக ஒர்க் அவுட் ஆகவில்லை என்பதால் மதுரையை சேர்ந்த பிரபல திரைப்பட விநியோகஸ்தர் மர்சூக் பாய் தான் விஜயகாந்தை கரிமேட்டில் உள்ள எனது ஸ்டூடியோவிற்கு அனுப்பி வைத்தார் எனவும் தெரிவித்தார். சினிமாவுக்குள் நுழையும் கனவில் இருந்த விஜயகாந்திடம் அப்போது தாம் காசு எதுவும் வாங்கவில்லை என்றும் பெரிய நிலைக்கு சென்றாலும் தன்னை மறக்காமல் நினைத்தால் போதும் என்று தான் அவரிடம் கூறி அனுப்பி வைத்தேன் எனவும் போட்டோகிராபர் ஆசைத்தம்பி தெரிவித்துள்ளார்.
விஜயகாந்த் மறைந்து 12 நாட்களுக்கு மேலாகியும் அவர் குறித்த சுவாரஸ்யமான புதுப் புதுத் தகவல்கள் நித்தமும் வெளிவந்துக் கொண்டிருக்கின்றன.












Click it and Unblock the Notifications