ஆதவ் உட்பட ஒரே குடும்பத்திலிருந்து களமிறங்கும் 3 வேட்பாளர்கள்.. கட்சி வேறு வேறு.. சுவாரஸ்யம்!
சென்னை: பெரிய கட்சிகள் சார்பில், ஒரு முறை வேட்பாளர்களாக களமிறக்கப்படுவதே பலருக்கு பெரும் கனவாக இருக்கும் நிலையில், ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர், பெரிய கட்சிகள் சார்பில் இந்த தேர்தலில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகன் ஆதவ் அர்ஜுனா தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடுகிறார். ஆதவ் அர்ஜுனாவின் மாமனார் லீமா ரோஸ் மார்ட்டின் அதிமுக சார்பில் களமிறங்குகிறார். ஆதவ் அர்ஜுனாவின் மைத்துனர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் புதுச்சேரியில் போட்டியிடுகிறார்.

ஆதவ் அர்ஜுனா
லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகள் டெய்சியின் கணவர் ஆதவ் அர்ஜுனா சில தேர்தல்களில் திமுகவுக்காக பணியாற்றியுள்ளார். அதன் பிறகு விடுதலைச் சிறுத்தை கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். அரசியல்வாதி, தேர்தல் வியூக வகுப்பாளர், தொழிலதிபர் என பல முகங்களை கொண்டவர் ஆதவ் அர்ஜுனா. தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும், இந்திய கூடைப்பந்து சம்மேளனத் தலைவராகவும் உள்ளார். வாய்ஸ் ஆப் காமன்ஸ் என்கிற அரசியல் வியூக நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
தவெகவில் ஆதவ்
விடுதலை சிறுத்தை கட்சியில் துணை பொதுச் செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜுனா, திமுகவை விமர்சித்ததால் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதன் பின்னர் தவெகவில் இணைந்தார். தற்போது தவெகவில் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளராக பொறுப்பு வகித்தார். இந்நிலையில், எதிர்வரும் சட்டசபை தேர்தலில் சென்னை வில்லிவாக்கம் தொகுதியிலும் போட்டியிடுகிறார் ஆதவ் அர்ஜுனா.
லீமா ரோஸ் மார்ட்டின்
ஆதவ் அர்ஜுனாவின் மாமியார், அதாவது லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ் மார்ட்டின் லால்குடியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடுகிறார். முன்பு, ஐஜேகே கட்சியில் செயல்பட்டு வந்த லீமா ரோஸ், அண்மையில் அதிமுகவில் இணைந்தார். இந்நிலையில் தற்போது லால்குடி சட்டசபை தொகுதியில் போட்டியிடுகிறார்.
ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்
ஆதவ் அர்ஜுனாவின் மைத்துனர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் லட்சிய ஜனநாயக கட்சி என்ற பெயரில் கட்சி தொடங்கி இருந்தார். அவர் தற்போது வேட்பாளராக புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியில் களமிறங்குகிறார். பாஜக - என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியில் ஜோஸ் சார்லஸ் மார்ட்டினின் கட்சி 2 இடங்களில் போட்டியிடுகிறது.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 நபர்கள் மூன்று முக்கிய கட்சிகள் சார்பில் சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் லாட்டரி மார்ட்டின், முன்னணி கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி வழங்கியது சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications