தமிழக சட்டசபை தேர்தல் வாக்களிப்பு நேரம் 1 மணி நேரம் அதிகரிப்பு.. தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலின்போது வாக்குப்பதிவு நேரம் ஒரு மணி நேரம் கூடுதலாக வழங்கப்படும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்தார்.
Recommended Video

தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. மார்ச் மாதம் துவக்கத்தில் தேர்தல் அறிவிக்கை வெளியிடப்படும் என்று தெரிகிறது.

இந்த நிலையில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான தேர்தல் அதிகாரிகள் குழு நேற்று முதல் சென்னையில் முகாமிட்டு அரசியல் கட்சி பிரதிநிதிகள், காவல்துறை அதிகாரிகள், ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பல தரப்பினருடனும் ஆலோசனை நடத்திவந்தார்.
இதையடுத்து இன்று மதியம் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்கு மையங்கள் எண்ணிக்கை 95 ஆயிரமாக அதிகரிக்கப்படும். அதாவது இப்போதை விட 25000 வாக்குச் சாவடிகள் அதிகரிக்கப்படும்.
கொரோனா நோய் பரவல் காலம் என்பதால், வாக்குப் பதிவு செய்யும் நேரம் ஒரு மணி நேரம் கூடுதலாக வழங்கப்படும். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன. மேலும் சில கட்சிகள் வாக்குப்பதிவு நடைபெற்று இரண்டு நாட்களுக்குள் அதன் முடிவுகளை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளன. இது பற்றி ஆய்வு செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications