ஒரே நாடு ஒரே தேர்தல்.. குரங்கு கையில் பூமாலை.. ஒரே சட்டை எல்லோரும் போட முடியுமா? சீமான் கிண்டல்
சென்னை: ஒரே நாடு ஒரே தேர்தல் அவசியமற்றது தேவையற்றது என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கூறியுள்ளார். ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் இருந்தாலே தேர்தல் செலவு குறைந்து விடும் என்றும் சீமான் கூறியுள்ளார்.
பாஜகவும் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானும் தொடர்ந்து வார்த்தை மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், தமிழகத்தில் மோடியை எதிர்த்து போட்டியிட தான் தயார் என்றும், அண்ணாமலையால் தன்னை விட ஒரு ஓட்டு அதிகம் வாங்க முடியுமா என்றும் சவால் விட்டார்.

அதற்கு பதில் அளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை , சீமான் எங்கு வேண்டுமானாலும் போட்டியிடட்டும் அவர் தோற்றுதான் போவார் என்றார். இப்படி மாறி மாறி இருவரும் வார்த்தை மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருப்பூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பில் திருப்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற சீமான், மீண்டும் பாஜகவை சீண்டியுள்ளார்.
அதாவது எரிவாயு சிலிண்டர் விலையில் 200 ரூபாயை மத்திய அரசு குறைத்து அறிவித்திருப்பதற்கு காரணம் 5 மாநிலங்களில் நடைபெற உள்ளதுதான் என்றார். 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறுவதை குறி வைத்தே பாஜக சிலிண்டர் விலையில் 200 ரூபாய் குறைத்துள்ளதாக கூறிய சீமான், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சிலிண்டர் விலை 2000 ரூபாய் உயர்த்தப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்றார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்த மத்திய அரசு முயற்சி செய்கிறதே என்று இன்றைய தினம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த சீமான், ஒரே நாடு ஒரே தேர்தல் அவசியமற்றது தேவையற்றது. கழுத்தை சுற்றி மூக்கை தொடலாமா? ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ஆதரவு கொடுத்தவர் கருணாநிதி. இவர்கள்தான் திராவிட நாடு கேட்ட திருவாளர்கள். மாநில தன்னாட்சி கேட்ட பெருமக்கள் இவர்கள்தான். ஒரே நாடு ஒரே தேர்தலில் என்ன நடந்து விடும் என்று நான் கேட்கிறேன். எதுவும் நடக்கப்போவதில்லை. ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்தினால் ஒருமுறை ஆட்சி கவிழ்ந்தால் எல்லா மாநிலத்திற்கும் சேர்த்து தேர்தல் நடத்துவது தண்டச்செலவு வெட்டிச்செலவு என்றும் சீமான் கூறியுள்ளார்.
ஒரு தொகுதியில் ஒரு உறுப்பினர் இறந்து விட்டால் அந்த தொகுதியில் மட்டும் தேர்தல் நடத்துவதா? அல்லது ஒட்டுமொத்த நாட்டிற்கும் தேர்தல் நடத்துவதா?
ஒரு மாநில ஆட்சி கலைந்தால் மீண்டும் நாடு முழுவதும் தேர்தல் நடத்துவார்களா? அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதிக்குள் மட்டும் தேர்தல் நடத்தினால் செலவு குறையும்.
குரங்கு கையில் பூமாலை கொடுத்தது போல உள்ளது மத்திய அரசின் நடவடிக்கை. பூவின் அருமையும் தெரியவில்லை பூமாலையின் அருமையும் தெரியவில்லை. எல்லாவற்றையும் பிய்த்து போடுகிறார்கள். அவர்கள் கையில் தேசத்தை கொடுத்து விட்டு நாம் முழித்துக்கொண்டிருக்கிறோம் என்றும் கிண்டலடித்தார்.
ஒரே நேரத்தில் லோக்சபா, மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்தினால் செலவு குறையும் என்று சொல்வதை ஏற்க முடியாது. ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் இருந்தாலே தேர்தல் செலவு குறையும் என்றும் சீமான் தெரிவித்தார். எல்லோராலும் ஒரே சட்டையை போட முடியாது அது போலத்தான் ஒரே தேர்தல் நடத்த முடியாது. இந்தியா என்பது ஒரே நாடு அல்ல அது பல மாநிலங்களின் கூட்டமைப்பு என்றும் சீமான் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications