நான் அரசியலுக்கு வர்றேன்.. 234 தொகுதியிலும் போட்டி போடறோம்.. கண்ணா.. இன்னையோட ஒரு வருஷமாச்சு!
சென்னை: கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் மொத்த நாடும் டிவியையே உற்றுநோக்கி கொண்டிருந்தது. வெள்ளை நிற ஜிப்பாவில் ரஜினிகாந்த் மேடைக்கு வந்தார்.
அப்போது அங்கு கூடியிருந்தவர்களும் டிவியை பார்த்து கொண்டிருந்தவர்களும் ஆஹா தலைவா தலைவா என அகமகிழந்தனர். தனக்கே உரிய ஸ்டைலில் நடந்து வந்த ரஜினிகாந்த் இரு கைகளை கூப்பி வணக்கமிட்டார்.
பின்னர் அவர் பேசத் தொடங்கினார். எல்லா வேலையும் முடிந்து விட்டது. இன்னும் அம்பு எய்துவது மட்டும்தான் பாக்கி. நான் அரசியலுக்கு வருவது உறுதி. 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு வெற்றி பெறுவோம்.

ரஜினி மக்கள் மன்றம்
ஒரு வேளை கொடுத்த வாக்குறுதிகளை செய்யத் தவறினால் ராஜினாமா செய்யத் தயார் என்று அவர் பேசப் பேச,.. ரசிகர்கள் அடைந்த உற்சாகம் இருக்கே.. அப்பப்பா...! அத்தோடு நிற்கவில்லை ரஜினிகாந்த். 2018-ஆம் ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி ரஜினி மக்கள் மன்றத்தையும் அவர் தொடங்கினார்.

அறிவிக்கவில்லை
"தலைவரின்" அடுத்தடுத்த மூவ்களால் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதைத் தொடர்ந்து அவர் பொங்கல் பண்டிகையன்று கட்சி பெயரை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் அவர் அறிவிக்கவில்லை. அது முதல் ஏமாற்றம். அடுத்தடுத்து அது தொடர்ந்ததுதான் ரஜினி ஸ்பெஷல்!

வன்முறை
செல்லும் இடங்களிலெல்லாம் பேட்டி கொடுத்தார். ஆனால் எல்லா இடங்களிலும் சர்ச்சையிலேயே முடிந்தது. கடந்த ஏப்ரல் மாதம் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராட்டம் நடத்திய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரஜினிகாந்த் ஆறுதல் தெரிவிக்க சென்றார். அப்போது தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள் நுழைந்ததாலேயே வன்முறை வெடித்ததாக கூறினார்.

கடுமையான சட்டங்கள்
இதைத் தொடர்ந்து மே மாதம் ஐபிஎல் ராட்டத்துக்கு எதிராக திரண்டவர்களில் சிலர் போலீஸ்காரர் ஒருவரை தாக்கிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலானது. அப்போது ரஜினி தனது டுவிட்டரில் வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவது தான்.இத்தகைய வன்முறை கலாச்சாரத்தை உடனே கிள்ளி எறியவில்லை என்றால் நாட்டுக்கே பேராபத்து.சீருடையில் இருக்கும் காவலர்கள் மீது கை வைப்பவர்களை தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை நாம் இயற்றவேண்டும் என கண்டனம் தெரிவித்தார்.

பரபரப்பு
கருணாநிதியின் நினைவஞ்சலி நிகழ்ச்சியில் ரஜினி பேசிய போது இறுதி சடங்கில் ராகுல் காந்தி உள்ளிட்டோரெல்லாம் வந்திருந்தனர். நமது தமிழக முதல்வர் வந்திருக்க வேண்டாமா, நீங்கள் என்ன எம்ஜிஆரா, ஜெயலலிதாவை விட பெரிய தலைவர்களா என கேட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

கமல் செல்கிறார்
இது போல் 7 தமிழர்கள் விடுதலை குறித்து ரஜினியிடம் கேட்டபோது யார் அந்த 7 பேர் என்று கேட்டது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து மோடியை எதிர்க்கட்சிகள் எதிர்த்தது குறித்து கேள்வி எழுப்புகையில் ஒருவரை 10 பேர் எதிர்த்தால் யார் பலசாலி என புரிந்து கொள்ளுங்கள் என்றார். இதைத் தொடர்ந்து கஜா புயல் பாதிப்புக்குள்ளான இடங்களுக்கு கமல் சென்று வரும் நிலையில் நீங்கள் செல்லாதது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவரோ நான் இன்னும் அரசியல் கட்சியே தொடங்கவில்லை. அதன் பிறகு பார்க்கலாம் என கூறியதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு
இப்படியாக ரஜினிகாந்த் அரசியலுக்கு வர போகிறேன் என கூறி இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. ஆனால் அவர் இதுவரை தொடங்கவில்லை. அதற்கான ஆயத்த பணிகள் ஈடுபட்டுள்ளதாகவே கூறிவருகிறார். வரவுள்ள இடைத்தேர்தலின் போதாவது கட்சியை தொடங்கி அவர் தேர்தலை சந்திப்பாரா என்பதை ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால் அடுத்தடுத்து புதுப் படங்களாக ஒப்புக் கொண்டு வருகிறார்.

கட்சி தொடங்காதது ஏன்
ரஜினியின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு 22 ஆண்டுகள் பொறுமை காத்துவிட்டோம். தற்போது நீங்கள் அரசியலுக்கு வருகிறேன் என அறிவித்து விட்டு ஓராண்டு ஆகிவிட்டது. இனியும் காலம் தாழ்த்தி எங்களை ஏமாற்றி விடாதீர் என்பதே ரசிகர்களின் கோரிக்கையாக உள்ளது. என்னை வாழ வைக்கும் தெய்வங்களாகிய தமிழக மக்கள் என அவ்வப்போது கூறிக் கொள்ளும் இந்த அருணாசலம் "ஆண்டவன்" கூறியும் இன்னும் கட்சித் தொடங்காதது ஏன்?












Click it and Unblock the Notifications