புயல் மீட்பு பணிகளில் தமிழக அரசு சூப்பர்.. மனம் திறந்து பாராட்டும் 'ஒன்இந்தியாதமிழ்' வாசகர்கள்
சென்னை: புயல் மீட்பு பணிகளில் தமிழக அரசு சூப்பராக செயல்படுவதாக 'ஒன்இந்தியாதமிழ்' வாசகர்களில் பெரும்பாலானோர் தெரிவித்துள்ளனர்.
கஜா புயல் கடந்து சென்ற நிலையில், புயல் மீட்பு நடவடிக்கைகளில் தமிழக அரசின் செயல்பாடு எப்படி உள்ளது என்று, 'ஒன்இந்தியாதமிழ்' இணையதளத்தில் கருத்து கேட்டிருந்தோம்.
அதில், சூப்பர், பரவாயில்லை, சுமார்தான், தெரியலை என்று ஆப்ஷன்களை வழங்கியிருந்தோம். இதில் ஒரு ஆப்ஷனை வாசகர்கள் தேர்ந்தெடுத்தனர்.
[உறங்காத உதயகுமார்.. களத்தில் நின்ற விஜயபாஸ்கர்.. கஜாவை சிறப்பாக எதிர்கொண்ட தமிழக அரசு!]

அரசுக்கு மக்கள் பாராட்டு
பொதுவாக அரசின் செயல்பாடுகளில் அத்தனை எளிதாக மக்கள் திருப்தியடைய மாட்டார்கள். ஆனால், இந்த வாக்கெடுப்பில், சூப்பர் என்ற ஆப்ஷனைத்தான் அதிக வாசகர்கள் தேர்ந்தெடுத்திருந்தனர். மொத்தம், 46.37 சதவீதம் வாசகர்கள், அரசின் செயல்பாட்டில் திருப்தி வெளிப்படுத்தியிருந்தனர்.

இரண்டாவது ஆப்ஷன்
பரவாயில்லை என்ற ஆப்ஷனை 25.71 சதவீதம் வாசகர்கள் தேர்ந்தெடுத்தனர். இதுபோன்ற ஒரு இடர்பாட்டு காலத்தில், பரவாயில்லை என்று மக்கள் சொல்வதும் கூட ஒரு வகையில் பாராட்டுதான். ஏனெனில் அவ்வளவு எளிதில் மக்களின் எதிர்பார்ப்பை இதுபோன்ற காலகட்டங்களில் பூர்த்தி செய்துவிட முடியாது. ஆனால், கஜா புயல் மீட்பு நடவடிக்கைகளில் அரசு இந்த நன்மதிப்பை பெற்றுள்ளது.

சுமார் என்போர் குறைவு
சுமார்தான் என்று 8.68 சதவீதம் பேரும், தெரியலை என்று 19.24 சதவீதம் பேரும் கூறியுள்ளனர். இந்த கருத்து கணிப்பு முடிவு என்பதை, தமிழக அரசின் புயல் மீட்பு பணிகளுக்கு மக்கள் கொடுக்கும் பாராட்டு பத்திரம் என்று எடுத்துக்கொள்ள முடியும்.

எதிர்க்கட்சிகளும் பாராட்டு
எப்போதும் இல்லாத ஆச்சரியமாக, தமிழக எதிர்க்கட்சி தலைவர், தமிழக அரசின் நடவடிக்கை ஒன்றுக்கு வெளிப்படையாக பாராட்டியுள்ளார் என்றால் அதுவும் கஜா புயல் மீட்பு நடவடிக்கைக்குதான். ஆம்.. புயல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் அரசு இயந்திரம் சிறப்பாக செயல்பட்டதாக, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், தமிழக அரசை பாராட்டியுள்ளார். நீண்ட காலமாகவே தமிழக அரசு மீது தொடர் விமர்சனங்களை வைத்து வந்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனும், இந்த விஷயத்தில் தமிழக அரசை பாராட்டி ட்வீட் செய்துள்ளார் என்பது கவனிக்கத்தக்கது. இந்த பாராட்டுகளை ஊக்கமாக எடுத்துக் கொண்டு, தமிழக அரசு, தடைபட்ட மின்சார வசதியை மீண்டும் வழங்குவது உள்ளிட்ட மீட்பு நடவடிக்கைகளில் முழு கவனம் செலுத்த வேண்டியதும் அவசியமாகும்.












Click it and Unblock the Notifications