புத்தாண்டிலும் குறையாத வெங்காய விலை.. டிடிஎச், செல்போன் ரீசார்ஜ், ரயில் கட்டணமும் கிடுகிடு
சென்னை: 2020 புத்தாண்டு பிறந்துள்ள போதிலும்கூட வெங்காயத்தின் விலை இன்னும் ஏறுமுகத்தில்தான் இருக்கிறது. இதனால் சாமானிய மக்கள் கடும் துயரத்தை அனுபவித்து வருகிறார்கள்.
கடந்த சில வாரங்களாகவே வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. பருவமழை அதிகமாகப் பெய்ததால் வெங்காயம் பயிரிடக்கூடிய பகுதிகளில் வெங்காய செடிகள் அழிவடைந்ததால், அவற்றின் விலை அதிகரித்துள்ளது என்று அரசு தரப்பு தெரிவிக்கிறது.
இருப்பினும் நமது நாட்டில் போதிய அளவுக்கு காய்கறிகளை சேமித்து வைக்க தேவையான குளிர்பதன வசதி கொண்ட கிட்டங்கி வசதி அதிக அளவுக்கு இல்லாதது, வெங்காய பதுக்கல், இந்த நிலையை முன்கூட்டியே அரசு கணிக்கத் தவறியது, போன்றவை வெங்காய விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது.
இப்போதும்கூட ஒரு கிலோ சின்ன வெங்காயத்தின் விலை 200 ரூபாய் என்ற அளவில் விற்பனையாகிறது. பெரிய வெங்காயம் ஒரு கிலோ 120 ரூபாய் என்ற அளவில் உள்ளது.
மானியம் இல்லா சமையல் எரிவாயு விலை இன்று முதல் அதிகரிப்பு.. 5வது மாதமாக விலைவாசி ஏறுமுகம்
ஏழை எளிய மக்கள் மட்டுமின்றி நடுத்தர வர்க்கத்து மக்களுக்கும் வெங்காயம் என்பது எட்டா காய்கறியாக மாறிப் போய்விட்டது. மிகக் குறைந்த அளவில்தான் அவர்கள் வெங்காயத்தை வாங்கி சமையலில் பயன்படுத்துகிறார்கள். மாத பட்ஜெட்டில் பெருமளவு காய்கறி விலைக்கே செலவிடுவதால் வேறு விஷயங்களுக்கு செலவிட கையில் பணம் இல்லாமல் மக்கள் திண்டாடி வருகின்றனர்.
இதோ குறைகிறது, அதோ, குறைகிறது என்று அரசு தொடர்ந்து கூறி வந்தாலும் கூட, பல வாரங்களாக வெங்காயத்தின் விலை குறைந்தபாடில்லை. ஆனால் நாட்டில் குடியுரிமை சட்ட பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் மக்களின் கவனம் இருப்பதால் இது வெளிச்சத்துக்கு வரவில்லை.
அரசும் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் குறியாக இருக்கும் நிலையில், விலைவாசி உயர்வு என்பது கட்டுக் கடங்காமல் சென்றுகொண்டே இருக்கிறது.
ஒரு பக்கம் காய்கறிகளின் விலை, மறுபக்கம் டிராய் நெறிமுறைகள் காரணமாக டிடிஹெச் சேவைகளுக்கான கட்டணம் உயர்வு, மற்றொரு பக்கம் செல்போன் கட்டணங்கள் அதிகரிப்பு, ரயில் கட்டணம் அதிகரிப்பு போன்ற இவை அனைத்தையும் கூட்டிப் பார்த்தால் மாத இறுதியில் எப்படியும் 3000 முதல் 5000 ரூபாயாவது பாக்கெட்டிலிருந்து அதிகம் செலவழிக்க வேண்டிய நிலையில்தான் மக்கள் உள்ளனர்.
உதாரணத்திற்கு முன்பு, 3 மாதங்களுக்கு ரூ.400 வசூலித்த ஒரு செல்போன் நிறுவனம், இப்போது 2 மாதங்களுக்கே அதை வசூலிக்கிறது. விரும்பிய சேனல்களை காசு கொடுத்து பார்க்கலாம் என அறிவித்த பிறகு டிடிஎச் சேவை கட்டணங்கள் 50 சதவீீதம் வரை கூடிவிட்டன.
இது சாமானிய மற்றும் நடுத்தர குடும்பத்தினருக்கு பெரிய சுமை ஆகும். இது தொடர்பாக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது இதுவரை தெளிவாக தெரிவிக்கப்படவில்லை.
மற்றொரு பக்கம் வியாபாரிகளிடம் இது தொடர்பாக கேட்டபோது, இன்னும் 30 நாட்கள் அல்லது அதற்கு முன்பாக வெங்காயத்தின் விலை ஓரளவு குறைய வாய்ப்பு இருக்கிறது. இதற்கு காரணம் காரீப் பருவத்தில் செய்யப்பட்ட வெங்காய சாகுபடி விளைச்சல் இந்த மாத இறுதியில் சந்தைக்கு வரத் தொடங்கும். அப்போது ஒரு கிலோ வெங்காயம் 50 முதல் 60 ரூபாய் என்ற அளவுக்கு குறைவடையும் வாய்ப்பு உள்ளது, என்று அவர்கள் தெரிவிக்கிறார்கள்.