இதுக்கு இல்லையா சார் ஒரு எண்ட்.. வெலவெலக்க வைக்கும் வெங்காயம் விலை! உரிக்காமலேயே கண்ணீர் வருதே!
சென்னை: கடந்த சில நாட்களாகவே வெங்காயத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இந்த நிலையில் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் 100 ரூபாய் வரை விற்பனையாவதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர். அதே நேரத்தில் வரும் காலங்களில் வெங்காயத்தின் விலை குறைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில், மழை என மாறி மாறி காலநிலை நிலவி வருகிறது. இதன் காரணமாக தக்காளி, வெங்காயம், உள்ளிட்ட சமையலுக்கு தேவையான முக்கிய காய்கறிகளின் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் வட மாநிலங்களில் கன மழை பெய்து வருவதால் ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து தக்காளி அந்த மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இதன் காரணமாக தமிழகத்திற்கு தக்காளி வரத்து வெகுவாக குறைந்தது.
மேலும் தமிழகத்தில் திண்டுக்கல், தேனி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் தக்காளி ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தைக்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து சென்னை கோயம்பேடு சந்தைக்கு கொண்டு செல்லப்படும். மேலும் ஆந்திரா, கர்நாடகாவில் இருந்தும் கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து இருக்கும். இந்த நிலையில் தற்போது உற்பத்தி அதிகரிப்பு காரணமாக 20 முதல் 30 லாரிகளாக இருந்த தக்காளி வரத்து 60 லாரிகளாக அதிகரித்துள்ளது.
கடந்த மாதம் 70 ரூபாய் வரை மட்டுமே விற்கப்பட்டு வந்த தக்காளி, கடந்த ஒரு வாரமாகவே விலை குறைந்து வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு 50 ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளி தற்போது 30 ரூபாய் என குறைந்து உள்ளது. ஆனால், சென்ற மாதம் 20 ரூபாய் முதல் 50 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ சின்ன வெங்காயம் தற்போது 50 ரூபாய் முதல் 70 ரூபாய் வரை விலை உயர்ந்து விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வெங்காயத்தின் விலையைப் பொறுத்தவரை சென்னை, கோவை, திருச்சி, மதுரை என எங்கு எடுத்துக் கொண்டாலும் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. அதிகபட்சமாக கடந்த மாதம் 100 ரூபாயை வெங்காயம் தொட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது ஒரு கிலோ பெரிய வெங்காயம் தரத்திற்கு ஏற்ப 70 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்பனையாகிறது. தரம் குறைந்த சிறிய வகை பெரிய வெங்காயம் 50 ரூபாய் வரை விற்பனையாகிறது.
ஆனால் மார்க்கெட்டிலும் வெளி கடைகளிலும் விற்கப்படும் வெங்காயத்தின் விலை 100 ரூபாய் தாண்டி அதிகரித்துள்ளதால், கிலோ கணக்கில் வாங்கிச் சென்ற மக்கள் தற்போது அரை கிலோ, கால் கிலோ என தேவைக்கேற்றபடி வாங்கிச் செல்கின்றனர். அதே நேரத்தில் மத்திய அரசின் நடவடிக்கைகள் காரணமாக உள்ளூர் சந்தைகளுக்கு வெங்காயத்தின் வரத்து அதிகரிக்கும் எனவும் இதனால் விலைகுறைய வாய்ப்பு இருக்கிறது என்கின்றனர் வியாபாரிகள்.
மேலும் மழைக்காலம் என்பதால் இனி வரும் காலங்களில் விலை அதிகரிக்கும் என்ற நம்பிக்கையின் காரணமாக விவசாயிகள் சிலர் வெங்காயத்தை விற்பனைக்கு கொண்டு வராமல் பாதுகாத்து வைத்திருக்கின்றனர். எனவே அவர்களும் ஒரே நேரத்தில் விற்பனைக்கு கொண்டுவரும் பட்சத்தில் வெங்காயத்தின் விலை குறைய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
தற்போதைய சூழ்நிலையில் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி ஒரு கிலோ 35 ரூபாய் வரை விற்பனையாகிறது. சின்ன வெங்காயம் 40 ரூபாய் முதல் 60 ரூபாய் வரையும், பச்சை மிளகாய் 25 ரூபாய் முதல் 35 ரூபாய் வரையும், பீட்ரூட் 35 ரூபாய்க்கும் உருளைக்கிழங்கு 45 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சுரைக்காய், அவரைக்காய், முட்டைகோஸ், கேரட், காலிபிளவர், முருங்கைக்காய், கத்தரிக்காய், பீன்ஸ் ஆகியவற்றின் விலையும் 50 ரூபாய் முதல் 100 ரூபாய்க்கு உள்ளாக இருக்கிறது. அதே நேரத்தில் இஞ்சி பூண்டு உள்ளிட்டவற்றின் விலை மற்றும் சற்று அதிகரித்து காணப்படுவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications