Exclusive: பாஜக & கம்யூனிஸ்ட் கட்சிகளில் மட்டுமே வாரிசு அரசியல் இல்லை! கார்த்தி சிதம்பரம் பளிச்
சென்னை: நமது ஒன்இந்தியா தளத்திற்குச் சிறப்புப் பேட்டி அளித்த காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் பாஜக குறித்துக் கூறியுள்ள கருத்துகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள பெரும்பாலான கட்சிகள் ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாகத் தெரிவித்த அவர், பாஜக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டுமே ஒரே குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.
சிவகங்கை தொகுதியின் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் நமது ஒன் இந்தியா தளத்திற்குச் சிறப்புப் பேட்டி அளித்தார். அதில் அரசியல் கட்சிகள் குறிப்பிட்ட குடும்பங்களின் கட்டுப்பாட்டில் இருப்பதாக எழும் விமர்சனங்கள் குறித்து அவர் விரிவான பதிலை அளித்தார்.

கார்த்தி சிதம்பரம்: இது தொடர்பாக அவர் பேசுகையில், "நமது நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளிலும் ஏதோ ஒரு குடும்பத்தின் ஆதிக்கம் இருக்கிறது. இதில் பாஜக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டுமே விதிவிலக்கு" என்றார்.
அதேநேரம் இந்த போக்கு இந்தியாவில் மட்டும் இருப்பது இல்லை என்று குறிப்பிட்ட கார்த்தி சிதம்பரம், இலங்கை, வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் போன்ற பல தெற்காசிய நாடுகளிலும் இதே நிலை தான் என்று சுட்டிக் காட்டினார். இந்த நாடுகளில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகள் சில குடும்பங்களின் கட்டுப்பாட்டிலேயே இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
குடும்ப அரசியல்: இது தொடர்பாக கார்த்தி சிதம்பரம் மேலும் பேசுகையில், "ஒவ்வொரு அரசியல் கட்சியும் ஒரு குடும்பத்தை மையமாகக் கொண்டது.. அந்த குடும்பத்தை மையமாக வைத்தே அந்த கட்சிகள் இயங்கும்.. அதுதான் இந்தியாவில் யதார்த்தம். எனவே, இது இந்தியாவில் மட்டும் நடக்கும் ஒரு விஷயம் என நம்மால் சொல்ல முடியாது. இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான் என எங்குச் சென்றாலும் இதை நிலை தான்.
பாகிஸ்தான் மக்கள் கட்சி பூட்டோவின் குடும்பத்தைச் சுற்றியே இருக்கிறது. வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவை சுற்றியே கட்சி இருக்கும். இலங்கையில் அது ராஜபக்சேக்கள் அல்லது குமாரதுங்கக்கள் அல்லது பண்டாரநாயக்கா குடும்பங்களைச் சுற்றி இருக்கும். இப்போது அங்கே அதிபராக இருக்கும் ஜெயமுரேந்திர விக்சிங்க கூட ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் மருமகன் தான்" என்றார்.
ஜப்பானில் கூட: மேலும், தெற்காசியாவைத் தாண்டியும் கூட பல நாடுகளில் இந்த முறை இருப்பதாக கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார். ஜப்பான் நாடாளுமன்றத்தில் 70% உறுப்பினர்கள் அரசியல் பின்னணியை கொண்ட குடும்பங்களில் இருந்து வந்தவர்கள் தான் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் கூறுகையில், "எனவே, இது காங்கிரஸ் அல்லது திமுகவில் மட்டும் நடப்பது எனச் சொல்ல முடியாது. இதுதான் இந்தியா. இதுதான் தெற்காசியா. இது ஒரு சமூகவியல் உண்மை. அதைத்தான் நான் கூறுகிறேன்.
இந்த குடும்பங்கள் செய்த தியாகம் காரணமாக அவர்கள் உடன் தொண்டர்கள் ஒரு வலுவான உணர்ச்சிப் பிணைப்பைக் கொண்டிருப்பார்கள். அதுதான் உண்மை.. இதன் காரணமாகவே தலைமை பதவி என்பது குடும்பங்களுக்குள்ளேயே இருந்துவிடுகிறது.
தனிநபர் வழிபாடு: நான் எந்தவொரு அரசியல் கட்சிக்கு எதிராகவோ அல்லது ஆதரவாகவோ இதைக் கூறவில்லை. மக்கள் குறிப்பிட்ட தலைவர்கள் மீது வைத்துள்ள அன்பு, பாசமே ஆகியவற்றையும் அந்த உணர்வுப்பூர்வமான பிணைப்பையும் நான் முழுமையாகப் புரிந்துகொள்கிறேன். இதை நீங்கள் தனிநபர் வழிபாடு என்று கூட சொல்லாம். ஆனால் மக்களின் இந்த அன்பு காரணமாக அந்த குடும்பங்களைச் சுற்றியே தலைமை பதவிகளும் அரசியல் கட்டமைப்புகளும் கட்டமைக்கப்படுகின்றன.
இந்தியாவில் பல கட்சிகள் குறிப்பிட்ட குடும்பங்களின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. காஷ்மீரில் தேசிய மாநாடு மற்றும் பிடிபி; பஞ்சாபில் அகாலி தளம்; மகாராஷ்டிராவில் சிவசேனா மற்றும் என்சிபி, ஒடிசாவில் பிஜேடி, வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ், ஆந்திராவில் தெலுங்கு தேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தமிழ்நாட்டில் திமுக, கர்நாடகாவில் ஜே.டி.எஸ் எனச் சொல்லிக் கொண்டே போகலாம்.
எனவே, இதில் காங்கிரஸை மட்டும் விமர்சிப்பது சரியான போக்கு இல்லை. இது இந்தியாவில் மட்டும் நடப்பது இல்லை. தெற்காசிய முழுக்க இதே நிலை தான் என்பதை மறுப்பதற்கு இல்லை" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications