ஜனநாயகன் பட சர்டிபிகேட்டை எதிர்த்த.. அந்த ஒரு அதிகாரி.. கோர்ட்டில் வைக்கப்பட்ட பாயிண்ட்.. போச்சு
சென்னை: ஜனநாயகன் படத்தின் சென்சார் சான்றிதழுக்கு எதிராக CBFC சென்சார் குழுவின் ஒரு உறுப்பினர் மட்டும் எப்படி புகார் அனுப்ப முடியும் என்று படத்தின் தயாரிப்பு தரப்பு கேள்வி எழுப்பி உள்ளது. புகார் அளித்தவர் யார் என்பது குறித்து இன்று வரை தயாரிப்பு நிறுவனத்திற்குத் தெரிவிக்கப்படவில்லை என்று கோர்ட்டில் தயாரிப்பு தரப்பு வாதம் வைத்துள்ளது.
நடிகர் மற்றும் அரசியல்வாதியான விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் உலகமெங்கும் ஜனவரி 9, 2026 அன்று வெளியாகவிருந்தது. இந்தப் படத்தின் வெளியீடு தற்போது சிக்கலுக்கு உள்ளாகி இருக்கிறது. தணிக்கைச் சான்றிதழ் தாமதமானதால், சென்னை உயர் நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் நேற்று தாக்கல் செய்த வழக்கில் நீதிமன்றம் இன்று தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியமான (CBFC) சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் (ASG) இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார். மறுபுறம், KVN புரொடக்ஷன்ஸ் சார்பில் மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன், வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் உதவியுடன் வாதாடினார். பட வெளியீட்டில் ஏற்படும் தாமதம் நிதி ரீதியாகவும், மன ரீதியாகவும், நற்பெயருக்கும் ஈடுசெய்ய முடியாத சேதத்தை ஏற்படுத்தும் என்பதை அவர் நீதிமன்றத்தில் முன்வைத்தார்.

ஜனநாயகன் தரப்பு வாதம் என்ன?
ஜனநாயகன் திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பராசன், தணிக்கைக் குழுவில் ஐந்து உறுப்பினர்கள் இருந்ததாகவும், அவர்களில் ஒவ்வொருவரும் தனித்தனியாகத் தங்கள் பரிந்துரைகளைப் பதிவு செய்ததாகவும் கூறினார். அந்தக் குழுவின் ஒரு உறுப்பினர் மட்டும் எப்படி புகார் அனுப்ப முடியும் என்று அவர் கேள்வி எழுப்பினார். புகார் அளித்தவர் யார் என்பது குறித்து இன்று வரை தயாரிப்பு நிறுவனத்திற்குத் தெரிவிக்கப்படவில்லை.
உண்மையில், இந்த புகாரானது தணிக்கைக் குழுவின் உறுப்பினர்களில் ஒருவரால் மட்டுமே அனுப்பப்பட்டுள்ளது என்பது தயாரிப்பு நிறுவனத்திற்கு இன்று தான் தெரியவந்தது. ஒரு தனி உறுப்பினரால் எழுதப்பட்ட கடிதத்தை 'புகார்' என்றே கருத முடியாது என அவர் வாதிட்டார். "நான் ₹500 கோடி முதலீடு செய்துள்ளேன். இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. ஜனவரி 9 அன்று படம் வெளியாகும் என்று நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். நான் டிசம்பர் 18 அன்றே விண்ணப்பித்து, தட்கல் நடைமுறையிலும் சென்றேன்," என்று வழக்கறிஞர் பராசன் குறிப்பிட்டார்.
தணிக்கைக் குழுவின் உறுப்பினர்களில் ஒருவர்
சென்சார் வாரிய அதிகாரிகள் சினிமா விதிகளைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். ஐந்து பேர் கொண்ட தணிக்கைக் குழுவில் ஒரு உறுப்பினரின் 'புகார்' மட்டும், குழுவின் U/A 16+ சான்றிதழ் வழங்கிய பரிந்துரையை ரத்து செய்ய எப்படி ஒரு காரணமாக முடியும் என்று வழக்கறிஞர் பராசன் கேள்வி எழுப்பினார். சிறுபான்மை கருத்து எப்படி பெரும்பான்மையாக மாறும் எனவும் அவர் வியப்புடன் தெரிவித்தார்.
இ-பிரமாண் இணையதளத்தில் தணிக்கைக் குழுவின் பரிந்துரை தெளிவாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, சில திருத்தங்களுடன் U/A 16+ சான்றிதழ் வழங்க சென்சார் வாரியம் முடிவு செய்திருந்தது. ஆகவே, இப்போது வாரியம் தனது முடிவை மாற்றி, திரைப்படத்தை மறுபரிசீலனைக்கு அனுப்ப முடியாது. பெரும்பான்மை முடிவு ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்றும், எனவே ஐவரில் நான்கு உறுப்பினர்களின் பரிந்துரையே இறுதியானது என்றும் பராசன் தனது வாதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications