ஆபரேஷன் சிந்தூர்! எல்லாம் சரியே..ராணுவத்துடன் நிற்கும் தமிழகம்! ஸ்டாலின், எடப்பாடி, அன்புமணி ஆதரவு!
சென்னை: காஷ்மீரின் பஹால்காம் பகுதியில் கடந்த மாதம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் நாட்டில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறி வைத்து தாக்குதல் நடத்தி இருக்கும் நிலையில் இந்தியா முழுவதும் ஆதரவு எழுந்துள்ளது. தமிழகத்திலிருந்து முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் இந்திய ராணுவத்தின் நடவடிக்கைக்கு துணை நிற்பதாக கூறியுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகளை குறி வைத்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் தாக்குதல் நடத்தி உள்ளது.
ஜெய்ஸ்-இ-முகமது அமைப்பின் நான்கு இலக்குகள், லஷ்கர் - இ - தொய்பாவின் 3 இலக்குகள், ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் இரண்டு தளங்கள் என 9 பயங்கரவாத முகாம்களை குறி வைத்து இந்தியாவில் முப்படைகளும் இணைந்து திடீர் தாக்குதல் நடத்தின.

அதில் தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்ட நிலையில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்திய ராணுவத்தின் இந்த நடவடிக்கைக்கு இந்தியா முழுவதும் ஆதரவு எழுந்துள்ளது. இந்தியாவின் பல்வேறு இடங்களில் தேசிய கொடியுடன் மக்கள் மகிழ்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
தமிழகத்திலிருந்து தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, பாமக தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் இந்திய ராணுவத்தின் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளதோடு தமிழகம் இராணுவத்தின் பக்கம் நிற்பதாக கூறியுள்ளனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,"பயங்கரவாதத்திற்கு எதிரான இந்திய ராணுவத்தின் நடவடிக்கைக்கு தமிழ்நாடு உறுதுணையாக இருக்கும். நாட்டிற்காகவும், ராணுவத்திற்காகவும் தமிழ்நாடு என்று உறுதியுடன் நிற்கும்" என கூறியுள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,"பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து, ஆபரேஷன் சிந்தூர் துல்லியமாக செயல்படுத்தியதற்காக இந்திய ஆயுதப்படைகளை நான் பாராட்டுகிறேன். மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடியின் விழிப்புடன் கூடிய தலைமையின் கீழ் நீதி வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்க்கமான நடவடிக்கை, பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கும், நமது குடிமக்களைப் பாதுகாப்பதற்கும் நமது தேசத்தின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது." என கூறியுள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள பதிவில்," நாட்டின் பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளும் சரியானவையே: மத்திய அரசுக்கு அனைவரும் துணை நிற்போம்! காஷ்மீரில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளின் கட்டமைப்புகளை அழிக்கும் வகையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வந்த 9 பயங்கர முகாம்கள் மீது இந்தியாவின் முப்படைகளும் இணைந்து தாக்குதல் நடத்தியுள்ளன. நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்படும் இத்தகைய அனைத்து நடவடிக்கைகளும் சரியானவை; தேவையானவை. இதில் மத்திய அரசுக்கும், முப்படைகளுக்கும் அனைவரும் துணை நிற்க வேண்டும்" என கூறீயுள்ளார்.












Click it and Unblock the Notifications