நீதிபதி சுரேஷ் குமார் அமர்வு சொன்ன “அந்த வார்த்தை”.. அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு மொத்தமா மாறுதே
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், குமரேஷ் பாபு தெரிவித்த கருத்துக்கள் இதில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி சட்ட விரோத பண பரிமாற்ற தடுப்பு சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் எம்.பி.,எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை சிறப்பு நீதிமன்றம் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டன. ஜாமீன் மனுவை தாம் விசாரிக்க அதிகாரம் உள்ளதா? என்பது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவு பெற்று வருமாறும் சிறப்பு நீதிமன்றம் கூறியிருந்தது.
இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பாக செந்தில் பாலாஜி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு, அந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ நீதிபதிகள், எம்.சுந்தர், ஆர்.சக்திவேல் அமர்வில் முறையிட்டார்.
அப்போது இந்த வழக்கை யார் விசாரிப்பது என்பது குறித்து தலைமை நீதிபதி தான் முடிவு செய்வார் என கூறிய நீதிபதி எம்.சுந்தர் இந்த வழக்கு தொடர்பாக தலைமை நீதிபதியிடம் முறையிடுங்கள் என கூறினார். இதனிடையே, இந்த வழக்கு தொடர்பாக நீதிபதி ஆர்.சுரேஷ் குமார் தலைமையிலான அமர்வு முன் செந்தில் பாலாஜி தரப்பில் முறையிடப்பட்டது.
இன்றைய வழக்கு விசாரணையின் போது, சிறப்பு நீதிமன்றத்துக்கு வழக்கை மாற்றியதே தவறு என நீதிபதிகள் கூறியுள்ளனர். சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து அனைத்து கோப்புகளையும் மீண்டும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கே மாற்ற வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சட்ட விரோத பண பரிமாற்ற தடைச் சட்டப்படி மத்திய அரசால் முதன்மை அமர்வு நீதிமன்றம் சிறப்பு நீதிமன்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எம்.பி. - எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றமாக அறிவித்த அரசாணை மத்திய அரசு சட்டத்துக்கு மேலானது அல்ல எனவும் கூறப்பட்டுள்ளது.
அதேபோல், சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட வழக்கை மீண்டும் முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் எனவும், வழக்கை மாற்றிய உத்தரவை திரும்பப் பெற முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேபோல், செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் சுரேஷ் குமார், குமரேஷ் பாபு அமர்வு உத்தரவிட்டுள்ளனர்.
"சிறப்பு நீதிமன்றத்துக்கு வழக்கை மாற்றியதே தவறு." என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள்" தெரிவித்து உள்ளதன் மூலம் ஜாமீன் மனு விசாரணை தொடர்பான குழப்பம் செந்தில் பாலாஜி தரப்புக்கு ஓரளவு தீர்ந்து வழக்கு முழுமையான முதன்மை நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுவது உறுதியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications