திருமா பக்கம் தாவும் சரத்குமார்? களம் இறங்கும் கட்சிகள்! மனம் மாறுமா தேர்தல் ஆணையம்?
சென்னை: மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்திற்கு எதிரான பிரச்சாரம் மீண்டும் சூடு பிடித்துள்ளது.
விசிக சார்பாக மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தை எதிர்த்து போராட்டங்களை இன்று நடத்தி உள்ளது. 100 விழுக்காடு ஒப்புகை சீட்டுகளை எண்ணித்தான் தேர்தல் முடிவை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தை விசிக நடத்தி உள்ளது.

மீண்டும் வாக்குச் சீட்டு முறைக்கே திரும்பலாம் என்று நடிகர் சரத்குமாரும் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்துப் பேசிய சரத்குமார், "ஒழுங்காக இவிஎம் மூலம் தேர்தல் நடைபெற்றால் வரவேற்கலாம். ஆனால், அமெரிக்காவிலேயே வாக்குச்சீட்டு மூலம்தான் தேர்தல் நடைபெற்றுவருகிறது. நம் நாட்டில் மட்டும்தான் இவிஎம் மூலம் தேர்தல் நடத்தப்படுகிறது.

இவ்வளவு பெரிய நாட்டில் வேகமாகத் தேர்தலை நடத்த வேண்டும் என்பதற்காகத்தான் இந்த இவிஎம் நடைமுறையைக் கொண்டுவந்தார்கள். இப்போது இந்த நடைமுறை தேவை இல்லை என்ற சிந்தனை வரத் தொடங்கி உள்ளது. வாக்குச் சீட்டு முறை இருந்தால்தான் யார் யாருக்கு ஓட்டுப் போடுகிறார் என்பது தெளிவாகக் கண்டுபிடிக்க முடியும்.
இவிஎம் முறையில் ஒரு வாக்கு செலுத்தப்படும் போது அது யாருக்குப் போகிறது என்பதில் குழப்பங்கள் உள்ளது. ஆகவே, பழைய மாதிரி வாக்குச் சீட்டு முறையிலேயே தேர்தலை நடத்தினால் நல்லது என்று நான் நினைக்கிறேன்.

இதைச் சொல்வதால், பலரும் பழைய மாதிரி மாட்டு வண்டியில் போகலாமே என்று கூட கேள்வி எழுப்புவார்கள். அப்படியல்ல. ஒட்டுமொத்தமாக அனைவரும் அதை வேண்டாம் எனச் சொன்னால், மீண்டு வாக்குச் சீட்டு முறைக்கே திரும்பலாம். அது நல்லதாக இருக்கும்" என்று கூறியுள்ளார்.
கடந்த ஐந்து ஆண்டுகள் முன்பே தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த சுனில் அரோரா, வாக்குச்சீட்டு தேர்தல் முறைக்குத் திரும்ப முடியாது என்று திட்டவட்டமாக மறுத்திருந்தார்.

அப்போது நடைபெற்ற 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்களில் 1 லட்சத்து 76 ஆயிரம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் அதில், 1% க்கும் கீழான இயந்திரங்களில் மட்டுமே கோளாறு ஏற்பட்டதாகவும் விளக்கம் அளித்திருந்தார்.
தேர்தல் முடிவுகள் சாதமாக வந்தால் தேர்தல் வாக்குப்பதிவு எந்திரங்கள் பற்றி யாரும் குறைகூறுவதில்லை என்றும் அதற்கு மாறாகப் பாதகமாக வந்தால், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு நடந்துள்ளதாகக் குறை கூறுவதாகவும் அவர் சொல்லி இருந்தார்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கால்பந்தாட்டத்தில் டாஸ் போடுவதைப் போலப் பயன்படுத்துவது தங்களைக் காயப்படுத்துவதாக உள்ளது என்றும் அவர் வேதனை தெரிவித்திருந்தார்.
இந்த விவாதம் எழுந்தபோது நடிகர் விஷால், வாக்குச் சீட்டு முறைதான் சிறந்தது என்று தனது ஆதரவைத் தெரிவித்திருந்தார்.

அதேபோல் 5 ஆண்டுகளுக்கு முன்னதாக ஆந்திர முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு இருந்த போது மின்னணு வாக்கு இயந்திரங்களைப் பயன்படுத்துவதற்கு எதிராக எதிர்க்கட்சிகள் சார்பில், உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்படும் என்று கூறியிருந்தார்.
ஏற்கெனவே இது குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு சென்றுள்ளது. அப்போது சரியான ஆதாரங்கள் இல்லை என்று கூறி வழக்கு தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.

ஆனால், வலதுசாரி ஆதரவாளர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால், மீண்டும் வாக்குச் சீட்டு முறை வந்தால் சண்டிகர் மேயர் தேர்தலில் நடைபெற்றதைப் போல மோசடிகள் நடக்கலாம் என்ற ஒருவாதத்தை முன்வைக்கின்றனர்.
ஒரு மாதம் முன்னதாக இந்தியக் குடியரசுக் கட்சியின் மாநில மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்ற போது, மீண்டும் தேர்தலில் வாக்குச்சீட்டு முறையைக் கொண்டுவரவேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் செ கு தமிழரசன் வலியுறுத்தி இருந்தார்.

திமுக கூட வாக்குச்சீட்டு முறையை ஆதரிக்கிறது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னால் இந்த விவகாரம் தீவிரமாக வெடித்தபோது அதிமுகவும் ஆதரவு தந்தது. ஆனாலும், தேர்தல் ஆணையத்தின் மனம் மாறவே இல்லை.
இப்போது பாஜக ஆதரவாளர்கள் 4 பேர் இவிஎம் மிஷின் தயாரிக்கும் பெல் நிறுவனத்தில் பணி அமர்த்தப்பட்டுள்ளது தொடர்பாக ஆர்டிஐ மூலம் வெளியான செய்தியால் இந்தச் சர்ச்சை மீண்டும் வெடித்துள்ளது.

இது குறித்து விசிகவை சேர்ந்த வன்னியரசு, "வடமாநிலங்களில் இந்த இவிஎம் வாக்குப் பதிவு முறைக்கு எதிராகத் தினம் தினம் போராட்டம் நடந்துவருகிறது. பிரதமர் மோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல; இவிஎம் மிஷினால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்று அங்குள்ள போராட்டக்காரர்களே சொல்கிறார்கள்.
முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் குரேசியே சில சந்தேகங்களை முன்வைத்துள்ளார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்குகளைவிட எண்ணப்பட்ட வாக்குகள் அதிகமாக உள்ளதை ஆதாரப்பூர்வமாக தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுக்கப்பட்டது.

உதாரணமாகக் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் 12 லட்சத்து 14 ஆயிரத்து 86. ஆனால், அதை எண்ணும்போது 12 லட்சத்து 32 ஆயிரத்து 417 வந்தது. அது எப்படி வந்தது? இது எப்படி நடந்தது என்று விளக்கம் கேட்டுத் தேர்தல் ஆணையத்திடம் ஆதாரப்பூர்வமாக ஆவணங்களைக் கொடுத்து விளக்கம் கேட்டார்கள். அதற்கு ஆணையம் இதுவரை பதிலளிக்கவில்லை.
லண்டனில் நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் எப்படி எல்லாம் இவிஎம் மிஷின் ஹேக் செய்யப்பட்டது என்பதற்கான ஆதாரங்களைப் பத்திரிகையாளர் சையது சுஜா என்பவர் முன்வைத்தார். இவிஎம் மிஷின் தயாரிக்கும் பெல் நிறுவனத்தில் உள்ளே புகுந்துள்ள பாஜகவினர் எப்படி ஹேக் செய்தார்கள் என்பதற்கான ஆதாரங்களை அவர் எடுத்து வைத்தார்.

அவர் பெல் நிறுவனத்தில் பணியாற்றியபோது நடந்த முறைகேடுகளைச் சொன்னார். அதை ஏற்று விசாரணைக்குக்கூடத் தேர்தல் ஆணையம் உத்தரவிடவில்லை. உடனே அவரது குற்றச்சாட்டு உண்மையானது அல்ல என மறுத்துவிடுகிறது.

இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்ததற்காக அவருடன் இருந்த 2 பத்திரிகையாளர்களை பாஜகவினர் கொன்றுவிட்டதாக அவர் சொல்கிறார். இவரும் அந்தத் தாக்குதலில் தப்பித்து லண்டன் போய்விடுகிறார். அப்படித்தான் சையத் சொல்லி இருக்கிறார். இது விசாரிக்கப்படவே இல்லையே? " என்கிறார்












Click it and Unblock the Notifications