“ஓபிஎஸ் அத்தியாயம் முடிந்தது.. வாழ்நாளை வீணாக்க முடியாது” - கடுகடுத்த பண்ருட்டி ராமச்சந்திரன்!
சென்னை: "ஓபிஎஸ் அத்தியாயம் முடிந்தது" என முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் பேசியுள்ளார். "முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அத்தியாயம் முடிந்தது, ஓபிஎஸ் உடன் பழகியதற்காக வாழ்நாளை வீணாக்க முடியாது" என அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் ஆலோசகரும், எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் விஜயகாந்த் ஆகிய முக்கிய அரசியல் தலைவர்களுடன் பயணித்தவருமான மூத்த அரசியல் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் புதிய கட்சி ஒன்றை தொடங்கியுள்ளார். அதற்கு "எம்ஜிஆர் அண்ணா திமுக" என்ற பெயரைச் சூட்டியுள்ளார்.

இன்று கட்சி பெயரை அறிமுகம் செய்து செய்தியாளர்களை சந்தித்த பண்ருட்டி ராமச்சந்திரன், "அனைவருக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற எண்ணத்துடனே கட்சி தொடங்கப்பட்டுள்ளது, சமூகத்தில் அடையாள அரசியல் கொள்கை அரசியலை சூறாவளி போல அடித்துள்ளது. அடையாள அரசியல் கொள்கை அரசியலால் மாற்றப்பட வேண்டும்" எனப் பேசினார்.
மேலும் அவர் பேசுகையில், "எங்களின் இந்த புதிய அரசியல் இயக்கம் தேர்தல் அரசியலில் ஈடுபடாது. எதிர்காலத்தில் கட்சியில் இருக்கும் யாரேனும் தேர்தல் அரசியலில் பங்கெடுக்க விரும்பினால் இதே கொள்கையோடு ஒத்துப் போகும் அரசியல் கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திப்போம். ஆனால் இது மக்களுக்கான இயக்கம்" எனக் கூறியுள்ளார்.
ஓபிஎஸ் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த பண்ருட்டி ராமச்சந்திரன், "ஓ.பன்னீர் செல்வம் அத்தியாயம் முடிந்துபோனது. ஓபிஎஸ் உடன் பழகியதற்காக காத்திருந்து வாழ்நாளை வீணாக்க முடியாது" எனக் கூறியுள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஆலோசகராகச் செயல்பட்டார் பண்ருட்டி ராமச்சந்திரன். ஓபிஎஸ் அணியை அதிமுகவுடன் இணைக்க எடப்பாடி பழனிசாமி உறுதியாக மறுத்துவிட்டார். அதன்பிறகு இந்த குழு தமிழக வெற்றிக் கழகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அதிலும் சாதகமான சூழல் இல்லை எனக் கூறப்படுகிறது.
ஓ.பன்னீர்செல்வம் தகுந்த சமயத்தில் தக்க நடவடிக்கை எடுக்காததால் தொண்டர்கள் கடுமையான குழப்பத்தில் இருப்பதாக கூறி பலரும் அவரிடம் இருந்து வெளியேறினர். வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர், மனோஜ் பாண்டியன், கு.ப.கிருஷ்ணன் என பலரும் மாற்றுக் கட்சிகளுக்கு ஓட்டம் பிடித்தனர். இந்தச் சூழலில் பண்ருட்டி ராமச்சந்திரனும் ஓபிஎஸ்ஸிடம் இருந்து விலகி தனிக் கட்சி கண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications