சபரீசன் ஒரு காபி சாப்பிட சொன்னார்! அவங்களாம் எங்க வாயை பார்த்தாங்க! போதுமா விளக்கம்? சீறிய ஓபிஎஸ்
சென்னை: முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் என்னை ஒரு காபி சாப்பிடுமாறு கூறினார், நானும் சாப்பிட்டேன் என அவருடனான சந்திப்பு குறித்து முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் விளக்கமளித்தார்.
அதிமுக பொதுக் குழு கூட்டத்தில் ஓபிஎஸ் நீக்கப்பட்டு அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் ஓபிஎஸ் நீதிமன்றங்களில் முறையிட்டும் அதற்கு எந்த பலனும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் பொதுச் செயலாளர் தேர்தலிலும் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றார். இதையும் ஓபிஎஸ்ஸால் தடுக்க முடியவில்லை. எடப்பாடி பழனிசாமியின் பின்னால் அத்தனைபேர் திரண்ட நிலையில் ஓபிஎஸ் மட்டும் நிராயுதபாணியாக நிற்பது ஏன் என்ற கேள்வி எழுந்தது.
இதற்கு திமுகவுடன் ஓபிஎஸ் நெருங்கி பழகுவதுதான் என எடப்பாடி ஆதரவாளர்கள் தெரிவித்தனர். திமுகவின் பி டீம் போல் ஓபிஎஸ் அதிமுகவை உடைக்க செயல்படுகிறார் என்றார்கள். அதை ஆமோதிக்கும் விதமாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டியின் போது ஓபிஎஸ்- சபரீசன் சந்திப்பு நடைபெற்றது. இந்த திடீர் சந்திப்பு குறித்து அதிமுகவினர் கடுமையாக விமர்சித்திருந்தனர்.
இதுகுறித்து ஓபிஎஸ் மவுனமாக இருந்த நிலையில் அவருடைய மகன் ஜெயபிரதீப் இந்த சந்திப்புக்கான காரணத்தை விளக்கியிருந்தார். இந்த நிலையில் நேற்று இரவு சென்னை அடையாறில் உள்ள டிடிவி தினகரனை ஓபிஎஸ் சந்தித்து பேசினார். அவருடன் மூத்த தலைவர் பண்ருட்டி ராமசந்திரனும் சென்றிருந்தார். இதையடுத்து டிடிவியும் ஓபிஎஸ்ஸும் செய்தியாளர்களை ஒன்றாக சந்தித்தனர்.

அப்போது தினகரன் கூறுகையில் அதிமுகவை ஹைஜேக் செய்தவர்களிடம் இருந்து கட்சியை மீட்க வேண்டும். அதிமுகவை மீட்டெடுக்க வேண்டும் என்பதற்காக நானும் சகோதரர் ஓபிஎஸ்ஸும் இணைந்து செயல்படவுள்ளோம் என்றார். இந்த நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்த ஓபிஎஸ்ஸிடம் முதல்வர் ஸ்டாலின் மருமகன் சபரீசனை சந்தித்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர் பதிலளிக்கையில் கிரிக்கெட் போட்டியின்போது சபரீசனை சந்தித்தது மரியாதை நிமித்தமானது. எதிர்க்கட்சியாக இருந்தாலும் மனித பண்புடன் நடந்து கொள்வதுதான் எனக்கு பழக்கம். சபரீசன் அவருடைய உதவியாளர் மூலம் எனக்கு அழைப்பு விடுத்தார். ஒரு காபி சாப்பிடச் சொன்னார், நான் போய் உட்கார்ந்து காபி சாப்பிட்டு வந்தேன். அங்கிருந்த விஐபிக்கள் எல்லாம் நாங்கள் என்ன பேசிக் கொண்டிருந்தோம் என எங்களையே பார்த்துக் கொண்டிருந்தனர். போதுமா இந்த விளக்கம்! இந்த விளக்கம் சொல்லியே நான் ஓய்ந்து போய்விடுவேன் போல என நகைச்சுவையாக கூறினார்.












Click it and Unblock the Notifications