பழனிசாமி பெயரை சொல்லவே வெட்கமாக இருக்கு.. தை பிறக்கட்டும்.. ஒரே போடாக போட்ட ஓபிஎஸ்
சென்னை: அதிமுக தொண்டர் உரிமை மீட்பு குழு ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. இதில், எடப்பாடி பழனிசாமி பெயரை சொல்லவே வெட்கமாக இருக்கிறது. 11 தேர்தல்களில் தொடர்ந்து தோற்று அதிமுகவை படுபாதாளத்தில் தள்ளிவிட்டார் எடப்பாடி பழனிசாமி. அவரை வீழ்த்துவது தான் நமது முதல் நோக்கம். அவருக்கு வரும் தேர்தலில் கட்டாயம் பாடம் புகட்ட வேண்டும் என ஓ பன்னீர் செல்வம் கூறினார்.
இதேபோல் ஆலோசனை கூட்டத்தில் பேசிய நிர்வாகிகள், "3 தொகுதிகளுக்காக எடப்பாடி இருக்கும் என்டிஏ கூட்டணியில் சேரக்கூடாது என்றும், எடப்பாடி பழனிசாமி இல்லாத எந்த அணியாக இருந்தாலும் அவர்களுடன் சேரலாம்" என வேண்டுகோள் விடுத்தனர். தொண்டர்கள் ஆலோசனைகளை கேட்டதற்கு பிறகு பேசிய ஓ பன்னீர் செல்வம், "யாருடன் கூட்டணி என்பதற்கு தை பிறந்தால் வழி பிறக்கும்" என்று கூறினார்.

நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் ஆலோசனை
அதிமுக - பாஜக கூட்டணியில் டிடிவி தினகரனின் அமமுக மற்றும் ஓ பன்னீர் செல்வத்தை இணைக்க முயற்சிகள் நடந்து வருகிறது. இன்று தமிழகம் வந்த மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
சுமார் 1.30 மணி நேரம் நடந்த இந்த சந்திப்பின் போது, ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் என்.டி.ஏ கூட்டணியில் இணைவதற்கு எடப்பாடி பழனிசாமி சம்மதம் தெரிவித்தார் என்று தகவல் வெளியானது. இந்த நிலையில் இன்று ஓ பன்னீர் செல்வம் தலைமையில் அதிமுக தொண்டர் உரிமை மீட்பு குழு ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.
எடப்பாடி இருக்கும் கூட்டணி வேண்டாம்
யாருடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அப்போது எடப்பாடி பழனிசாமி இருக்கும் கூட்டணியில் இணைவதற்கு நிர்வாகிகள் எதிரிப்பு தெரிவித்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி இல்லாத எந்த அணியாக இருந்தாலும் அவர்களுடன் சேரலாம் என நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும் 3 தொகுதிகளுக்காக எடப்பாடி இருக்கும் என்டிஏ கூட்டணியில் சேரக்கூடாது என்று குன்னம் ராமச்சந்திரன் தெரிவித்தார். இதேபோல் பழனிசாமி இல்லாத அதிமுகவில் தான் இணைவோம் என்றும், குரங்கு கையில் சிக்கிய பூமாலை போல அதிமுக ஆகிவிட்டது என்று வைத்திலிங்கம் பேசினார். தொடர்ந்து யாருடன் கூட்டணி என்பது தொடர்பாக பேசிய ஓ பன்னீர் செல்வம் தை பிறந்தால் வழி பிறக்கும் என்று கூறினார்.
எடப்பாடிக்கு தக்க பாடம் புகட்டப்படும்
மேலும் ஓ பன்னீர் செல்வம் கூறுகையில், தொண்டர்களுக்காக உருவாக்கப்பட்ட இயக்கம் அதிமுக. வெல்ல முடியாத இயக்கமாக அதிமுக இருந்தது. ஆனால் இப்போது அதிமுகவை எடப்பாடி படுகுழியில் தள்ளிவிட்டார். எடப்பாடி பழனிசாமி பெயரை சொல்லவே வெட்கமாக இருக்கிறது.
11 தேர்தல்களில் தொடர்ந்து தோற்று அதிமுகவை படுபாதாளத்தில் தள்ளிவிட்டார் எடப்பாடி பழனிசாமி. அவரை வீழ்த்துவது தான் நமது முதல் நோக்கம். அவருக்கு வரும் தேர்தலில் கட்டாயம் பாடம் புகட்ட வேண்டும். தை பிறந்தால் வழி பிறக்கும். என்று கூறினார்.












Click it and Unblock the Notifications