சட்டசபை தேர்தலில் “தளபதி” வாய்ப்பு கொடுத்தால் உறுதியாக போட்டியிடுவேன்.. ஓபிஎஸ் சொன்ன சேதி!
சென்னை: சட்டசபை தேர்தலில் தளபதி (ஸ்டாலின்) வாய்ப்பு அளித்தால் உறுதியாகப் போட்டியிடுவேன் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். “இனிமேல் அரசியலில் தளபதி எடுக்கும் முடிவுக்கு முழுமனதாக ஆதரவு தருவேன்; கட்டுப்படுவேன்” என்று திமுகவில் இணைந்த பின்னர் ஓபிஎஸ் பேட்டி அளித்துள்ளார்.
சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் திமுகவில் இணைந்துள்ளார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திராவிட முன்னேற்ற கழகத்தில் அவர் ஐக்கியமானார். அவருடன் அவரது மகனும், முன்னாள் எம்.பி.யுமான ரவீந்திரநாத், உசிலம்பட்டி எம்.எல்.ஏ ஐயப்பன் ஆகியோரும் திமுகவில் இணைந்துள்ளனர்.

திமுகவில் இணைந்துள்ள ஓ.பன்னீர்செல்வத்துக்கு முக்கிய பதவியும், அவரது ஆதரவாளர்களுக்கு பொறுப்புகளும் வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது. மேலும், தேர்தலுக்குப் பிறகு அமைய இருக்கும் புதிய சட்டமன்றத்தில், திமுக வெற்றி பெறும்போது ஓ.பன்னீர்செல்வத்துக்கு சபாநாயகர் அல்லது அமைச்சர் பதவி கொடுக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், வரும் சட்டசபை தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் உசிலம்பட்டி எம்.எல்.ஏ ஐயப்பன் ஆகியோருக்கு திமுக சார்பில் போட்டியிட சீட் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. அவரது ஆதரவாளர்களுக்கு திமுகவில் உரிய மரியாதை அளிக்கப்படும் என்றும் ஓபிஎஸ்ஸிடம் உறுதி அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் திமுகவில் இணைந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார் ஓபிஎஸ். அப்போது, 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக மகத்தான வெற்றியைப் பெற்று, மீண்டும் முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்பார் எனத் தெரிவித்தார்.
மேலும், “எடப்பாடி பழனிசாமி அதிகாரப் போக்குடன் செயல்படுகிறார். அவர் அ.தி.மு.க.வை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்கிறார். தென் மாவட்டத்திலிருந்து ஒரு தலைவர் வர கூடாது என அவர் உறுதியாக உள்ளார்” என்றும் குற்றம்சாட்டினார் ஓபிஎஸ்.
சட்டசபை தேர்தலில் போட்டியிடுவீர்களா என்ற செய்தியாள்ர்களின் கேள்விக்கு பதில் அளித்த ஓ.பன்னீர்செல்வம், “திமுக தொண்டனாகத்தான் இன்று இணைந்திருக்கிறேன். தளபதி (ஸ்டாலின்) வாய்ப்பு அளித்தால் உறுதியாகப் போட்டியிடுவேன்” என கூறியுள்ளார். மேலும், “இனிமேல் அரசியலில் தளபதி எடுக்கும் முடிவுக்கு முழுமனதாக ஆதரவு தருவேன்; கட்டுப்படுவேன்” என்றும் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
வரும் சட்டசபை தேர்தலில் ஓபிஎஸ், போடிநாயக்கனூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட உள்ளதாகத் தெரிகிறது. 5 முறை எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் ஓ.பன்னீர்செல்வம். 2001 மற்றும் 2006ல் பெரியகுளம் தொகுதி எம்.எல்.ஏவாகவும், 2011, 2016, 2021 தேர்தலில் போடிநாயக்கனூர் தொகுதியில் இருந்தும் அதிமுக சார்பில் எம்.எல்.ஏ ஆனார்.












Click it and Unblock the Notifications