மீண்டும் திமுக தான் ஆட்சி அமைக்கப் போகுதாம்.. சொல்வது முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்!
சென்னை: அனைத்து எதிர்க்கட்சிகளும் பிரிந்து கிடப்பதால், வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவிற்கே மீண்டும் வாய்ப்பு இருப்பதாக பொதுமக்கள் பேசுகின்றனர் என முன்னாள் முதலமைச்சரும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக ஆளுங்கட்சியான திமுக தேர்தலுக்கான வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளது. இந்நிலையில், முன்னாள் முதல்வரான ஓபிஎஸ், திமுகவுக்கே மீண்டும் வாய்ப்பு உள்ளதாக பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் மருது சகோதரர்களின் 224-ஆம் ஆண்டு குருபூஜை விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் முன்னாள் முதலமைச்சரும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று மரியாதை செலுத்தினார். அப்போது 6.5 கிலோ எடையுள்ள வெள்ளி கவசம் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், "தமிழகம் மட்டுமல்ல இந்திய நாடு வல்லரசாக உலக அளவில் செயல்பட காரணமாக இருந்தவர்கள் மருது பாண்டியர்கள். அவர்களின் தியாகம் விலைமதிப்பற்றது" என்றார்.
தொடர்ந்து பேசிய ஓபிஎஸ், "இன்றய சூழ்நிலையில், எல்லா கட்சிகளும் பிரிந்து இருக்கிறது. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் அதிமுக பிரிந்து இருக்கிறது. அதைப்போல பாமக பிரிந்து இருக்கிறது. ராமதாஸ் - அன்புமணி இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அனைத்து எதிர்க்கட்சிகளும் பிரிந்து கிடப்பதால், வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவிற்கு வாய்ப்பு இருப்பதாக பொதுமக்கள் பேசுகின்றனர். இதனை நான் சொல்லவில்லை.
யாருடைய அரசியல் வாழ்க்கையும் பிரகாசமாக இருப்பது என்பது மக்களின் கையில் தான் உள்ளது. அதிமுகவை தொண்டர்களுக்கான இயக்கமாக எம்.ஜி.ஆர் உருவாக்கினார். கழகத்தின் தொண்டர்கள் மூலமாக பொதுச் செயலாளரை தேர்வு செய்ய வேண்டும் என்பதுதான் சட்ட விதிமுறை. ஆனால் அதனை தற்போது உருமாற்றி விட்டனர். திமுகவிலிருந்து எம்.ஜி.ஆரை நீக்குவதற்கு அக்கட்சியில் இருந்த சில பொதுக்குழு உறுப்பினர்கள் தான் காரணம்.
தனக்கு ஏற்பட்ட நிலை இனிவரும் அதிமுக பொதுச் செயலாளர்களுக்கு ஏற்படக்கூடாது, என்பதற்காகத்தான் தொண்டர்கள் மூலமாக பொதுச் செயலாளர் தேர்வு செய்யும் விதிமுறையை புஎம்ஜிஆர் கொண்டு வந்தார். அவர் கொண்டு வந்த சட்டத்தை நிலைநாட்டுவதற்காக நீதிமன்றத்தில் சட்ட போராட்டம் நடத்தி கொண்டிருக்கிறோம்" எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications