முதுகில் குத்திய பாஜக.. திமுகவுடனும் கூட்டணி இல்லையா? மறைமுகமாக மெசேஜ் அனுப்பிய ஓ.பன்னீர்செல்வம்!
சென்னை: மீண்டும் தமிழக அரசியலில் பேசுபொருளாக மாறி இருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதற்கு முன்பாக அறிக்கையை விட்டு எதிர்ப்பை பதிவு செய்த அவர் திமுக கூட்டணியில் இணையலாம் என கூறப்படுகிறது. இந்த நிலையில் திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம் என்ன முடிவில் இருக்கிறார் என்ற குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது.
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தபோது அதிகாரம் மிக்க நபராக அதிமுகவில் வலம் வந்தவர் ஓபிஎஸ். ஜெயலலிதாவுக்கு அடுத்த இடத்தில் இருந்தவர் என்றே கூறலாம். கட்சியின் பொருளாளராக கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் பணியாற்றியவர்.
முதலமைச்சராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும், நிதி அமைச்சராகவும் பணியாற்றியவர். ஜெயலலிதா சிறை செல்ல நேர்ந்த போதெல்லாம் அவரது இடத்தில் முதலமைச்சராக ஆட்சியை நடத்தியவர். இப்படி பல பெருமைகளுக்கு சொந்தக்காரராக இருந்தாலும் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அவரது அரசியல் அஸ்தமனமாக தொடங்கியது.

சசிகலாவால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டு தர்ம யுத்தத்தை நடத்தினார். சசிகலா சிலைக்கு சென்ற பிறகு எடப்பாடி பழனிச்சாமிக்கு கை கொடுத்தார். ஆட்சியில் இருந்த போதும் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்த போதும் எடப்பாடி பழனிச்சாமியே முன்னிறுத்தப்பட்டார். இதனால் அதிர்ச்சியில் இருந்த ஓ.பன்னீர்செல்வம், 2021 தேர்தலில் பாஜக கூட்டணி அமைய ஒரு காரணமாக இருந்தார். ஆனால் தேர்தலில் தோல்வியை சந்தித்ததும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி திரும்பினார்.
கட்சிக்கு ஒற்றை தலைமை வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி போர் கொடி தூக்க அதற்கு எதிர்ப்பு ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து பொதுக்குழுவால் கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டார். சட்டப் போராட்டங்கள் நடத்தியும் எந்தவித பயனும் இல்லை. இந்த நிலையில் கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிட்டார் ஓ.பன்னீர்செல்வம் தோல்வி அடைந்தார். அதிமுகவும் தோல்வியடைந்தது.
இதனால் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஓபிஎஸ் மீதான கோபம் அதிகரித்தது. இந்த நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக பாஜக கூட்டணி அமைந்திருக்கும் நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் முக்கியத்துவம் பாஜகவில் குறைந்தது. பிரதமர் மோடியை சந்திக்க ஓபிஎஸ் நினைத்த போதும் அதற்கு அனுமதி கிடைக்கவில்லை. இதை அடுத்து பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
முன்னதாக ஒன்றிய அரசை கண்டித்து அறிக்கையும் விட்டார். அதற்கு பிறகு பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குறித்தும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார் ஓபிஎஸ். இந்த நிலையில் திமுக கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம் இணைய இருப்பதாக சொல்லப்பட்டது. அதற்கேற்றார் போல் முதலமைச்சர் ஸ்டாலினை ஒரே நாளில் இரண்டு முறை சந்தித்தார்.
இந்த நிலையில் தனது பாணியிலேயே அறிக்கை மூலமே தனது நிலைப்பாட்டை தெரிவித்து இருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். திமுகவுடன் கூட்டணி அமைக்கப் போவதாக வதந்தி பரப்பப்படுவதாக நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார் ஓபிஎஸ். இந்த நிலையில் இன்று திமுக அரசுக்கு கடும் கண்டனம் என மற்றொரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல் மருத்துவர் கல்லூரி மருத்துவமனைகள் செயல்பட்டு வரும் நிலையில் அதில் கடலூர் மற்றும் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைகளில் போதிய பல் மருத்துவர்கள் இல்லை எனவும், அந்த கல்லூரிகளின் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என இந்திய பல் மருத்துவ கவுன்சில் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. இந்த நிலைக்கு தள்ளிய திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாகவும், பல் மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறார்.
இதன் மூலம் திமுக அரசுக்கு எதிராக தான் செயல்படுவதாக தோற்றத்தை உருவாக்கி இருக்கிறார் ஓபிஎஸ். பாஜக கூட்டணி முடிவுக்கு முன்னர் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்ட ஓ.பன்னீர்செல்வம், தற்போது திமுகவுக்கு எதிராகவும் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இதன் மூலம் திமுக கூட்டணிக்கு செல்லப் போவதில்லை என்பதை மறைமுக மெசேஜ் ஆக சொல்லி இருக்கிறார் ஓபிஎஸ் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.












Click it and Unblock the Notifications