பச்சையா சொல்றேன்.. "அவரை போல ஒரு கேவலமான ஜென்மம்".. அமைச்சர் ஜெயக்குமாரை வறுத்தெடுத்த கோவை செல்வராஜ்
சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பற்றிய கேள்வியால் ஆவேசமடைந்த ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ், அவரை கடுமையான சொற்களால் பத்திரிகையாளர் சந்திப்பில் விமர்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு மற்றும் ஜெயலலிதா மரணம் குறித்த இரு நீதிபதிகளின் அறிக்கைகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
கோவை செல்வராஜிடம், செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதற்குப் பதில் அளித்துப் பேசிய அவர், ஜெயக்குமார் குற்றச்சாட்டு பற்றிக் கேட்டதும் பொங்கிவிட்டார்.

பொய் சொன்ன எடப்பாடி
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் கோவை செல்வராஜ் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும். துப்பாக்கிச்சூடு பற்றி தொலைக்காட்சியில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன் என்று எடப்பாடி பழனிசாமி பொய் கூறியுள்ளார் எனத் தெரிவித்தார்.

தவறு செய்தவர்கள்
மேலும் பேசிய அவர், இரண்டு அறிக்கைகளும் வெளிவந்து 6 நாட்கள் ஆகியுள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி வாயை திறந்து பேசாமல் இருப்பது வேடிக்கையாக உள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தவறு செய்தவர்கள் மீது நீதிபதிகள் பெஞ்ச் அமைத்து 6 மாத காலத்திற்குள் விசாரித்து குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லவில்லை
மேலும், ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா, விஜயபாஸ்கர் மீது விரைந்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோவை செல்வராஜ் வலியுறுத்தினார். மேலும், சினிமா போஸ்டர் ஒட்டிக்கொண்டு இருந்தவர்களை அதிமுகவில் எம்.எல்.ஏக்களாக, அமைச்சர்களாக ஆக்கியவர் ஜெயலலிதா. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை சரி இல்லாத நேரத்தில் அவர்களை வெளிநாடு அழைத்து சென்று உயர் சிகிச்சை தரவில்லை எனக் குற்றம்சாட்டினார்.

ஜெயக்குமார் ஏன் குரல் கொடுக்கல
அப்போது செய்தியாளர் ஒருவர் எழுப்பிய ஓபிஎஸ், சசிகலா இருவரும் இணைந்து ஜெயலலிதாவை கொன்றார்கள் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த கோவை செல்வராஜ், "அப்போது அமைச்சராக இருந்த ஜெயக்குமார் ஏன் ஜெயலலிதாவை சிகிச்சைக்கு வெளிநாடு அழைத்துச் செல்லவேண்டும் என்று குரல் கொடுக்கவில்லை?

பச்சையா சொல்றேன்
5 வருடங்கள் அமைச்சராக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் அவர் குரல் கொடுக்காமல் மௌனம் காத்தார். ஜெயக்குமார் பேசுவதெல்லாம் ஒரு பேச்சா? ஜெயக்குமாரை பற்றி பச்சையா சொல்றேன். மரத்தில் ஒரு துணியை சுற்றி இருந்தாலும் அதை அண்ணாந்து பார்ப்பார். அவர் ஒரு கேவலமான ஜென்மம். அவர் அதிமுகவையே அழித்துக் கொண்டிருக்கிறார்.

புரோக்கர்
அந்த கேவலமான வடைசட்டி தலையனை பற்றி எல்லாம் பேசாதீங்க. அவர் அதிமுகவே கிடையாது. அவர் ஒரு புரோக்கர். யார் எதை பேசச் சொன்னாலும் பேசுவார், அவர் கட்சிக்காரரே கிடையாது" என கடுமையான சொற்களால் ஜெயக்குமாரை விமர்சித்துப் பேசினார் கோவை செல்வராஜ். திடீரென கோவை செல்வராஜ் ஆவேசமடைந்து ஜெயக்குமாரை மிகவும் கடுமையாகப் பேசியது அங்கிருந்தோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications