ஒட்டுமொத்த கூட்டத்தில் ஒரே ஒருத்தர் கூட மறுக்கலையே.. எடப்பாடி அணியினர் பற்றி மருது அழகுராஜ் கிண்டல்!
ஒரே ஒருவர் கூட என் தலைவன் துரோகி இல்லை என மறுக்கவில்லையே எனச் சாடியுள்ளார் மருது அழகுராஜ்.
சென்னை : "இன்றுவரை மனிதன் ஆகாதவர்கள் நாங்கள் மனித வெடிகுண்டு ஆவோம்.. என கொலை மிரட்டலும் விடுக்கிறார்கள்." என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமாரை சீண்டியுள்ளார் ஓபிஎஸ் அணியின் கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகுராஜ்.
ஊரெல்லாம் கூடி ஆர்ப்பாட்டம் மறியல் என குரளி வித்தை செய்த அந்த ஒட்டுமொத்த கூட்டத்தில் ஒரே ஒருவர் கூட என் தலைவன் துரோகி இல்லை என இன்று வரை மறுக்கவில்லை என்றும் சாடியுள்ளார் மருது அழகுராஜ்.
மதுரை விமான நிலைய மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில், அதனை விமர்சித்துள்ளார் மருது அழகுராஜ்.

எடப்பாடி பழனிசாமி
அதிமுகவில் ஒற்றைத் தலைமைக்கான போட்டியில் எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச் செயலாளர் இருக்கையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார். ஜூலை 11ல் நடந்த பொதுக்குழு, நீதிமன்ற வழக்குகள், இடைத்தேர்தலில் இரட்டை இலையில் போட்டி, பொதுச் செயலாளர் தேர்தல் என வேகமாக, தலைமைப் பதவியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. தேர்தல் ஆணையத்தில் தனது பலத்தை நிரூபித்து கட்சியை முழுமையாகக் கைப்பற்ற தயாராகி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. இந்தச் சூழலில் மதுரை விமான நிலையத்தில் நடந்த சம்பவம் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஏர்போர்ட் சம்பவம்
சிவகங்கையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள சென்னையில் இருந்து விமான மூலம் மதுரைக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வந்தார். அப்போது, சிங்கப்பூரில் இருந்து சொந்த ஊர் திரும்பிய சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை சேர்ந்த ராஜேஸ்வரன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் லைவ் போட்டார். அப்போது, துரோகத்தின் அடையாளம் எடப்பாடி பழனிசாமி எனப் பேசினார். இதைக் கண்ட எடப்பாடி பழனிசாமியின் பாதுகாவலர் ராஜேஸ்வரனின் செல்போனை பறித்து விமான நிலைய பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைத்தார். இதையடுத்து விமான நிலைய போலீசில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ராஜேஸ்வரன் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

ஈபிஎஸ் மீது வழக்குப்பதிவு
இதன் தொடர்ச்சியாக அவனியாபுரம் காவல் நிலையத்தில் ராஜேஸ்வரன் புகார் ஒன்றை அளித்தார். அதில், எடப்பாடி பழனிசாமியின் தூண்டுதலின் பேரில் அவரது பாதுகாவலர், முன்னாள் அமைச்சர்கள் சிலர் தன்னை தாக்கியதாகவும், தனது செல்போனை பறித்துக் கொண்டதாஜவும் புகார் தெரிவித்தார். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் மணிகண்டன், எம்.எல்.ஏ பி.ஆர்.செந்தில்நாதன் உள்ளிட்ட 6 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆர்பி உதயகுமார்
மதுரை விமான நிலைய சம்பவம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை கண்டித்து அதிமுக சார்பில் மதுரையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பேசுகையில், மதுரை தொண்டர்கள் ஜெயிலுக்கு போக பயந்தவர்கள் அல்ல. நாங்கள் பல ஜெயில்களை பார்த்தவர்கள். எங்களிடம் இதுபோன்று பூச்சாண்டி காட்டாதீர்கள். அதிமுக எதற்கும் அஞ்சாது. எடப்பாடி பழனிசாமி மீது பொய் வழக்கு போடும் இதுபோன்ற சர்வாதிகாரப் போக்கு தொடரும் என்றால் மதுரையில் அதிமுகவினர் மனித வெடிகுண்டாக மாறுவோம் என எச்சரிக்கை விடுத்தார்.

மருது அழகுராஜ்
இந்நிலையில், விமானமும் பறிபோன மானமும் என்ற தலைப்பில் அதிமுக ஓபிஎஸ் அணியின் கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகுராஜ் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "ஒருத்தன் நேருக்கு நேர் நின்று கேள்வி கேட்டால்.. பதிலற்ற கோழைகள் திராணியற்ற மூடர்கள் முதலில் தாக்குகிறார்கள் அடுத்து.. கிரிமினல் போதைப் பேர்வழி பொறம்போக்கு அட்ரஸ் இல்லாதவன் என்றெல்லாம் கேள்வி கேட்டவரை நோக்கி அவதூறு பரப்புகிறார்கள்.. இன்றுவரை மனிதன் ஆகாதவர்கள் நாங்கள் மனித வெடிகுண்டு ஆவோம்.. என கொலை மிரட்டலும் விடுக்கிறார்கள்.

துரோகி இல்லைனு மறுக்கலையே
காரணம் ஒன்றே ஒன்று தான்.. இன்றைக்கு விமான பயணத்தில் கேள்வி கேட்ட இளைஞன் போல நாளை வீதி தோறும் நின்று கேட்பவன் எண்ணிக்கை பெருகிவிட்டால் என்ன செய்வது என்கிற தற்குறிகளுகே உரிய பதற்றம் தான்.. ஆனாலும் ஒன்று.. ஊரெல்லாம் கூடி ஆர்ப்பாட்டம் மறியல் என குரளி வித்தை செய்த அந்த ஒட்டுமொத்த கூட்டத்தில் ஒரே ஒருத்தன் கூட என் தலைவன் துரோகி இல்லை என இன்று வரை மறுக்கவில்லை.. அப்ப கேள்வி சரிதான் கேட்டது தான் தப்போ..?" எனச் சீண்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications