ஓபிஎஸ் செருப்புக்கு பாலிஷ்..வார்த்தையை விட்ட புகழேந்தி! பதவியை அனுபவிச்சியே வெட்கமா இல்லையா?அட்டாக்
சென்னை : ஓ.பன்னீர்செல்வத்தின் கால் செருப்பை எடுத்துப் போட்டு அழகுபார்த்து, அதன் மூலம் பதவிகளை அனுபவித்துவிட்டு இப்போது அதைப் பற்றிப் பேசுவது ஏன்? என அதிமுக முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமிக்கு, புகழேந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுகவில், ஈபிஎஸ், ஓபிஎஸ் அணிகள் இடையே மோதல் ஏற்பட்ட பிறகு இரு தரப்பினரும் மாறி மாறி கடுமையாக தாக்கிப் பேசி வருகின்றனர். சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையை முன்வைத்தும் இரு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர்.
அந்தவகையில், அதிமுக முன்னாள் அமைச்சரும் ஈபிஎஸ் ஆதரவாளருமான கேபி முனுசாமி, ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்காமல் மௌனியாக வேடிக்கை பார்த்தார் ஓபிஎஸ் என விமர்சித்திருந்தார்.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ள ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி, ஓபிஎஸ் தயவால் பதவிகளை அனுபவித்துக்கொண்டிருந்தபோது அது தெரியவில்லையா எனச் சாடியுள்ளார்.

ஏன் ஓபிஎஸ் பக்கம் இருந்தார்?
செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி, "ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டபோது, சிகிச்சைகளை முறையாக செய்வதை சசிகலா தடுத்ததாகவும், ஓ.பன்னீர்செல்வம் மௌனியாக இருந்ததாகவும் கேபி முனுசாமி விமர்சித்துள்ளார். ஜெயலலிதா உயிரைக் காப்பாற்றவில்லை என ஓ.பன்னீர்செல்வத்தை விமர்சிக்கும் கேபி முனுசாமி எதற்கு, ஓபிஎஸ் பக்கம் இருந்தார்?

ஓபிஎஸ்ஸால் மீண்டும் அரசியல் வாழ்க்கை
ஜெயலலிதாவால் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த கே.பி.முனுசாமிக்கு, ஜெயலலிதா மரணத்துக்குப் பின்னர் அரசியல் வாழ்க்கை கொடுத்தது ஓபிஎஸ் தான். அவர், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவைப் பெற்றுத்தான் பல பதவிகளை பெற்று வளர்ச்சி அடைந்தார். ஆனால் தற்போது, ஓபிஎஸ்ஸை அவர் அவதூறாகப் பேசி வருகிறார்.

அமைச்சராக ஆசைப்பட்டார்
2019ல் லோக்சபா தேர்தலில் நின்று தோல்வியடைந்தார் முனுசாமி. பின்னர், ராஜ்யசபா சீட் வாங்கினார். 6 மாதங்கள் தான் அந்த பதவியில் இருந்தார். அதற்குள் எம்.எல்.ஏ தேர்தலில் நிற்கப்போகிறேன் என சீட் கேட்டார். அதிமுக ஆட்சி அமைந்தால் அமைச்சராகி விடலாம் என ஆசைப்பட்டார். தான்தோன்றித்தனமாக செயல்பட்டு வேறொருவருக்கு கிடைக்க வேண்டிய சீட்டை பறித்தார்.

கையெழுத்து போட்டது ஏன்?
முனுசாமி தேர்தலில் நின்றபோதும், ராஜ்யசபா எம்பி ஆனபோதும், ஏ ஃபார்ம், பி ஃபார்மில் யார் கையெழுத்து போட்டது? அதிமுகவில் துணை ஒருங்கிணைப்பாளர் எனும் பெரிய பதவி கிடைத்ததே.. அதற்கு யார் கையெழுத்து போட்டது? ஜெயலலிதாவுக்கு மருத்துவமனையில் சரியாக சிகிச்சை அளிக்காதவரின் காலுக்கு பாலிஷ் போட ஏன் சென்றீர்கள்?

ஓபிஎஸ் செருப்பு
ஓபிஎஸ் கால் செருப்பை எடுத்துப் போட்டு அழகுபார்த்து, அதன் மூலம் பதவிகளை அனுபவித்துவிட்டு இப்போது அதைப் பற்றிப் பேசுவது ஏன்? எங்கள் தலைவி மரணத்திற்கு நீதி வேண்டும், ஓபிஎஸ்ஸோடு நான் சேரமாட்டேன் எனக் கூறி இருந்தால் அது ஒரு நல்ல அரசியல்வாதிக்கு அழகு. கேவலமாக எல்லா பதவிகளையும் வாங்கி அனுபவித்துவிட்டு, இப்போது இழிவாகப் பேசுவது அசிங்கமாக இருக்கிறது." என விமர்சித்துள்ளார்.

டீக்கரை நடத்தியவரிடம் எப்படி இவ்வளவு பணம்?
சமீபத்தில் அதிமுக மேடையில் பேசிய அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி, "மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதாவை சசிகலா தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். ஓபிஎஸ் மௌனியாக இருந்து சசிகலாவுக்கு கட்டுப்பட்டார். ஜெயலலிதா தேவையா, சசிகலா தேவையா என்று வருகின்ற போது சசிகலாவே தேவை என்று சசிகலா சொல்வதைக் கேட்டு அமைதியாக இருந்தார் ஓபிஎஸ். தன்னிடமிருந்து முதல்வர் பொறுப்பை பறித்தவுடன், தர்மயுத்தம் நடத்தினாரே தவிர, பொறுப்பு முதல்வராக இருந்தபோது, ஜெயலலிதாவின் உடல்நலனில் ஓபிஎஸ் அக்கறை கொள்ளவில்லை. டீக்கடை நடத்தியவருக்கு எங்கிருந்து வந்தது இவ்வளவு பணம்?" என கடுமையாக விமர்சித்திருந்தார். அதற்கு பதிலடியாகவே புகழேந்தி இவ்வாறு பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications