அடுத்த அசைன்மென்ட்டில் பிசி.. போனை எடுத்த ஓபிஎஸ் டீம்.. ‘ஒவ்வொரு மாவட்டத்திலும்!’ .. என்ன கணக்கு?
சென்னை : இணக்கமாகச் செல்ல எடப்பாடி பழனிசாமி ஒத்துழைக்காத நிலையில், ஈபிஎஸ் தரப்பினரை தம் பக்கம் இழுக்கும் வேலையில் தீவிரமாக இறங்கியுள்ளது ஓபிஎஸ் தரப்பு. தனது ஆதரவு நிர்வாகிகள் மூலம் மாவட்ட வாரியாக பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஓபிஎஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தனது அழைப்பை எடப்பாடி பழனிசாமி ஏற்காமல், முரண்டு பிடித்து வரும் நிலையில், ஓ.பன்னீர்செல்வமும், எதிர் தாக்குதலை தொடங்கிவிட்டார்.
இதற்கிடையே, கடந்த சில நாட்களாகவே, முன்னாள் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் என பல்வேறு நிர்வாகிகள் ஓபிஎஸ் பக்கம் தாவி வருகின்றனர். அதிலும் உச்சமாக சிட்டிங் எம்.எல்.ஏ ஐயப்பனும் ஓபிஎஸ் பக்கம் தாவினார்.

தாவும் நிர்வாகிகள்
அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்துக்கு சாதகமாக வந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு நாளை மறுநாள் வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், மீண்டும் தனது சொந்த ஊரான தேனி மாவட்டம், பெரியகுளத்திற்குச் சென்றார் ஓ.பன்னீர்செல்வம். அவரை மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் நேற்று சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

மாஜிக்கள்
முன்னாள் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், முன்னாள் மாவட்ட செயலாளர்கள் பலர் ஓபிஎஸ்ஸை சந்தித்து ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், மாஜி அமைச்சர்கள் பலருடனும் ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறதாம். தென் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவரும், கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவரும் ஓபிஎஸ் அணிக்குத் தாவ ரெடியாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. உசிலம்பட்டி எம்.எல்.ஏ ஐயப்பனை தொடர்ந்து மேலும் சில எம்.எல்.ஏக்களுக்கும் வலை வீசி வருகிறதாம் ஓபிஎஸ் தரப்பு.

பின்னணியில் நடக்கும் வேலை
அதோடு மட்டுமல்லாமல், மாவட்ட வாரியாக பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஓபிஎஸ் தரப்பினர் பேசி வருகின்றனராம். இதற்காக, ஒவ்வொரு மாவட்டத்திலும் நிர்வாகிகளுக்கு அசைன்மெண்ட் கொடுத்துள்ளாராம் ஓபிஎஸ். நீதிமன்ற தீர்ப்பின்படி பொதுக்குழு கூட்டத்தை நடத்த வேண்டும் என்றால் பலம் அவசியம் என்பதற்காக பொதுகுழு உறுப்பினர்களை தம் பக்கம் இழுக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளதாம் ஓபிஎஸ் டீம்.

ஃபோன் டாக்
நேற்று ஓபிஎஸ் பெரியகுளத்தில், தனது ஆதரவாளர்களைச் சந்தித்தபோது, ஒவ்வொரு மாவட்டத்திலும் பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்களை விரைவாக நம் பக்கம் கொண்டு வர வேண்டும் என்று அறிவுறுத்தினாராம். அதைத் தொடர்ந்து, உடனடியாக அவரது ஆதரவாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்களிடம் போனில் பேசி ஆதரவைத் திரட்டும் வேலையில் தீவிரமாக இறங்கியுள்ளனராம்.

ஓப்பன் பேச்சு
இந்த நிலையில் திடீரென நேற்றிரவு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி சவால் விடுத்துள்ளார். நான் ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்ய தயார். நீங்களும் உங்களுடைய பதவியை ராஜினாமா செய்யத் தயாரா? இருவரும் ராஜினாமா செய்து விட்டு மக்களை சந்திப்போம் என தேனியில் தனது ஆதரவாளர்களுடன் நடைபெற்ற கூட்டத்தில் வெளிப்படையாகவே பேசியுள்ளார் ஓபிஎஸ். அவரது இந்த சவால் ஈபிஎஸ் தரப்பிற்கு ஷாக் கொடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications