சரி அதை விடுங்க.. வலுவான எதிர்க்கட்சியாகிறது அதிமுக.. ஆனால் யார் எதிர்க்கட்சித் தலைவர்?
சென்னை : தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் திமுக கூட்டணி 159 இடங்களை கைப்பற்றி 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்துள்ளது. அதே சமயம் அதிமுக கூட்டணி 74 இடங்களை கைப்பற்றி உள்ளது.
இதனையடுத்து எடப்பாடி பழனிச்சாமி தனது முதல்வர் பதவியை இன்று காலை ராஜினாமா செய்துள்ளார். நாளை கவர்னரை சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளார் ஸ்டாலின். கொரோனா பரவல் காரணமாக கவர்னர் மாளிகையில் எளிய முறையில் பதவியேற்பு விழாவை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
"ஒத்த" தொகுதியா.. "என்ன நடந்தாலும்" நாங்க அதிமுக பக்கம்தான்..அழுத்தமாக சொன்ன கொங்கு.. திமுக அப்செட்
யார் எதிர்க்கட்சி தலைவர்
இது ஒருபுறம் இருக்க, வலுவான எதிர்க்கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சி தலைவராக அமர போவது யார் என்ற குழப்பம் அதிமுக.,விற்குள் எழுந்ததுள்ளது. ஏற்கனவே தேர்தலுக்கு முன், முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே போட்டி ஏற்பட்டது. பிறகு ஒரு வழியாக வேறு வழியில்லாமல் இபிஎஸ்.,ஐ முதல்வர் வேட்பாளராக ஓபிஎஸ் அறிவித்தார்.
முன்னிலையில் இருக்கும் இபிஎஸ்
இந்த தேர்தலில் அதிக ஓட்டு எண்ணிக்கை வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்கள் பட்டியலில் எடப்பாடி பழனிச்சாமி 3 வது இடத்தில் உள்ளார். ஆனால் ஓ.பன்னீர்செல்வம், திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வனிடம் மிகுந்த போராட்டத்திற்கு பிறகு குறைவான ஓட்டு வித்தியாசத்திலேயே வெற்றி பெற்றுள்ளார். பல சுற்றுகளில் பின்னடைவையும் சந்தித்தார்.
நெருக்கடிகளை சமாளித்த எடப்பாடியார்
அது மட்டுமின்றி ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, ஒ.பன்னீர்செல்வம் நடத்திய தர்மயுத்தம் போராட்டத்தால் அதிமுக.,வே உடைந்து விடுமோ என்ற நிலை ஏற்பட்டது. ஆனால் அமைதியாக இருந்து கட்சியையும், முதல்வர் பதவியையும் கைப்பற்றினார் எடப்பாடி பழனிச்சாமி. பிறகு ஓபிஎஸ், தொண்டர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து, தினகரன், ஸ்டாலின் போன்றோர் கொடுத்த நெருக்கடிகளையும் சமாளித்து ஆட்சி காலத்தை நிறைவு செய்துள்ளார்.
தேர்தலில் எடப்பாடியாரின் வியூகம்
அத்துடன் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு என்ற எடப்பாடி பழனிச்சாமியின் வியூகம், சாதியை தாண்டி வட மாவட்டங்களில் அதிமுக.,விற்கு வெற்றியை பெற்று தந்துள்ளது. தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தாலும், அதை மரியாதையான தோல்வியாக மாற்றிய பெருமை எடப்பாடி பழனிச்சாமியை சேரும்.
செல்வாக்கு வாய்ந்த ஓபிஎஸ்
ஆனால், அதே சமயம் ஓ.பன்னீர்செல்வத்திற்கு டெல்லியிலும், கட்சிக்குள்ளும் இருக்கும் செல்வாக்கால் பல விஷயங்களை அவரால் சாதிக்க முடியும். எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவருமே சம அளவு பலத்துடன் இருப்பதால் யார் எதிர்க்கட்சி தலைவராக அமர போகிறார் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. இவர்களில் யார் எதிர்க்கட்சி தலைவர் என்பதை அதிமுக.,வின் பொதுக்குழு மற்றும் செயற்குழு முடிவு செய்யும் என கூறப்படுகிறது.