சீட் நஹி பைய்யா.. லோடு லாரி போல் ஆகும் ஏசி ரிசர்வ் கோச்சுகள்..! விழிபிதுங்கி நிற்கும் ரயில் பயணிகள்!
சென்னை : கடந்த பல வருடங்களாக முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளை அன்ரிசர்வ்டு பயணிகள் ஆக்கிரமித்து வந்த நிலையில் தற்போது சில நாட்களில் ஏசி கோச் வரை அட்டகாசம் அதிகரித்துள்ளதாக புகார் கூறுகின்றனர். ரயில் பயணிகள். ரயில்களில் அதிகளவு கூட்ட நெரிசல் ஏற்பட காரணம் என்ன? இதற்கு என்னதான் தீர்வு?என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்..
உலகின் மிகப்பெரிய ரயில் சேவை நெட்வொர்க்காக இந்தியன் ரயில்வே உள்ளது. நிர்வாக வசதிக்காக கிழக்கு ரயில்வே தென்னக ரயில்வே மேற்கு ரயில்வே என பிரிக்கப்பட்டு சேவை வழங்கப்படுகிறது. 100 ஆண்டுகளுக்கு மேலே பழமையான இந்தியன் ரயில்வே நெட்வொர்க்கில் பத்து லட்சத்திற்கும் மேலான பணியாளர்கள் பணி புரிகின்றனர்.

ஆண்டுக்கு 500 கோடிக்கு மேலான பயணிகளை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு அதுவும் குறைந்த கட்டணத்தில் கொண்டு சேர்க்கும் மகத்தான பணியை இந்தியன் ரயில்வே செய்து வருகிறது.
இந்தியன் ரயில்வே: அதே நேரத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் மக்கள் தொகை, முன் பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் கூட இட நெருக்கடி ஆகியவற்றின் காரணமாக ரயில்வே திணறி வருகிறது. மேலும் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் நூற்றுக்கணக்கானோர் ஒரே நேரத்தில் குவிவதால் பல மணி நேரம் நின்று கொண்டே பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை ஏசி அல்லாத முன்பதிவு பெட்டிகளில் நடைபெற்று வந்த அன்ரிசவ்ர்டு பயணிகளின் ஆக்கிரமிப்பு தற்போது ஏசி கோச்சுகள் வரை நீண்டு இருக்கிறது.
அதிகரிக்கும் அட்டகாசம்: தமிழகத்தைப் பொறுத்தவரை பீகார், குஜராத் மேற்குவங்கம், ராஜஸ்தான் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வரும் வடமாநில தொழிலாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொலைதூர வண்டிகளில் இட நெருக்கடி காரணமாக அவர்கள் ஏசி கோச்களில் தஞ்சம் புகுகின்றனர். தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா கர்நாடகா கேரளா போன்ற தென் மாநிலங்களுக்கும் வடமாநிலங்களில் இருந்து வரும் தொழிலாளர்கள் பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஏசி கோச்களில் வட மாநில தொழிலாளர்களின் அட்டகாசங்கள் அதிகரித்து வருகிறது.
அத்துமீறும் பயணிகள்: கும்பலாக சேர்ந்து மிரட்டுவது, ரயில் பெட்டிகளுக்குள் சமைத்து சாப்பிடுவது புகைப்பிடிப்பது, எச்சில் உமிழ்வது போன்ற செயல்களிலும் ஈடுபடுவதாக பல ஏசி கோச்களில் பயணம் செய்யும் பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் ரயில் நிலையங்களில் மற்ற பயணிகளை ஏறவிடாமல் இறங்கவிடாமலும் தாழ்ப்பாள் போட்டுக் கொள்வது போன்ற செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் டிக்கெட் கேட்கும் பரிசோதகர்களை கத்தியால் குத்திய சம்பவம் கூட நடைபெற்றது. வட மாநிலங்களில் தான் இந்த நிலை என்றால் சென்னை எழும்பூரில் இருந்து தென் மாவட்டங்கள் நோக்கி செல்லும் ரயில்களிலும் இதே நிலைதான் நீடிக்கிறது.
ஏசி பெட்டிகளில் ஆக்கிரமிப்பு: வைகை எக்ஸ்பிரஸ், பாண்டியன் எக்ஸ்பிரஸ், முத்துநகர் எக்ஸ்பிரஸ், நிஜாமுதீன், சம்பத் கிராந்தி போன்ற ரயில்களில் பயணிக்கும் வடமாநில தொழிலாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிகளை கூட ஆக்கிரமித்துக் கொள்ளும் தொழிலாளர்கள் ஏற்கனவே டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகளை கூட உள்ளே அனுமதிப்பதில்லை. மேலும் சென்னையை தாண்டியதும் தாம்பரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் கூட ரயில் பெட்டிகளை உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு மற்ற பயணிகளை ஏறவிடாமல் செய்துவிடுகின்றனர். இதனால் பல மணி நேரங்கள் காத்திருப்பதோடு பண விரையமும் மன உளைச்சலும் ஏற்படுவதாக பல பயணிகள் சமூக வலைதளங்களில் குற்றம் சாட்டி வருகின்றனர்.
பாலியல் தொல்லை: மேலும் தன்னை வட மாநில தொழிலாளர்கள் உடல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக பெண் ஒருவர் பகீர் புகார் கொடுத்தது பெரிய அளவிலான அச்சத்தை ஏற்படுத்தியது. இதனால் ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்திருக்கிறது. அதே நேரத்தில் வட மாநில தொழிலாளர்கள் என குறிப்பிட்ட ஒரு பிரிவை மட்டும் குற்றம் சாட்ட முடியாது. நாளுக்கு நாள் பயண தேவைகள் அதிகரித்து வரும் நிலையில் போதிய ரயில்கள் இயக்கப்படாதது இது போன்ற பிரச்சனைகளுக்கு காரணம் எனக் கூறப்படுகிறது. மேலும் தொலைதூரம் செல்லும் ரயில்களில் இரண்டு அல்லது மூன்று முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் மட்டுமே இணைக்கப்படுகிறது.
கூடுதல் ரயில்கள்: ஆனால் குறைந்த செலவில் நீண்ட தூர பயணம் என சிக்கனத்திற்காக ரயில் பயணம் மேற்கொள்ளும் சிலர் இது போன்ற மிகக் குறைந்த முன்பதிவு இல்லா பெட்டிகளால் பாதிக்கப்படுகின்றனர். எனவே முன்பதிவு இல்லாத பெட்டிகளில் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். தென் மாநிலங்களுக்கு இயக்கப்படும் ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும், ஒவ்வொரு மாநிலத்திற்குள்ளும் இயக்கப்படும் ரயில்களில் கூடுதல் முன்பதிவு இல்லா பெட்டிகளை இணைக்க வேண்டும், சிறப்பு ரயில்களாக அதாவது முன்பதிவு இல்லாத ரயில்களை இயக்க வேண்டும் என பல கோரிக்கையில் இருக்கிறது.
என்ன காரணம்: மேலும் வந்தே பாரத் போன்ற ரயில்கள் வந்துவிட்ட பிறகு எற்கனவே இயக்கப்பட்டு வந்த வைகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்களுக்கு இந்திய ரயில்வே முக்கியத்துவம் தருவதில்லை என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது. எனவே ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் ரயில்களோடு புதிதாக கூடுதலாக பல ரயில்களை இயக்குவதே நெரிசலுக்கு தீர்வு தரும். அதே நேரத்தில் ரயில் நிலையங்களில் மட்டும் பாதுகாப்பு தருவதை நிறுத்திவிட்டு ரயில்களிலும் பயணிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிப்பதே இதுபோன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட வழி வகுக்கும் என்கின்றனர் பொதுமக்கள்.












Click it and Unblock the Notifications