தமிழகத்தில் அரசியல் கணக்கை தொடங்கிய ஒவைசி! வாணியம்பாடியில் திமுக-அதிமுகவை திணற வைத்த மஜ்லிஸ் கட்சி!
சென்னை: தெலுங்கானா மாநில அரசியலில் கோலோச்சி வரும் அஸதுத்தீன் ஒவைசியின் அகில இந்திய மஸ்லிஸ் -ஏ-இத்திஹாதூல் முஸ்லிமீன் கட்சி, இப்போது தமிழகத்திலும் தனது அரசியல் கணக்கை தொடங்கியிருக்கிறது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சி 19-வது வார்டில் வெற்றிபெற்றுள்ள மஜ்லிஸ் கட்சி வேட்பாே நஃபிலா, திமுக, அதிமுக வேட்பாளர்களை பின்னுக்கு தள்ளியிருக்கிறார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் அமமுகவுடன் கூட்டணி அமைத்த ஒவைசி, இப்போது நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனது கட்சியை தனித்து களமிறக்கியிருந்தார்.

நகர்ப்புற உள்ளாட்சி
தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் பல எதிர்பாராத திருப்பங்களும், சுவாரஸ்யங்களும் உள்ளடங்கியிருக்கின்றன. அந்த வகையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சி 19-வது வார்டில் ஆளுங்கட்சியான திமுகவையும், எதிர்க்கட்சியான அதிமுகவையும் திணற வைத்து அதிரடி வெற்றியை ஈட்டியிருக்கிறார் அஸதுத்தீன் ஒவைசியின் மஜ்லிஸ் கட்சி பெண் வேட்பாளர் நஃபிலா. உருது பேசும் முஸ்லீம்கள் அதிகம் வசிக்கக் கூடிய வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஒவைசி கட்சி சார்பில் பலரும் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டனர்.

அரசியல் கணக்கு
இதனிடையே ஒரே ஒரு இடத்தில் தான் அகில இந்திய மஸ்லிஸ் -ஏ-இத்திஹாதூல் முஸ்லிமீன் கட்சி வேட்பாளர் வெற்றிபெற்றிருக்கிறார் என்றாலும் கூட, அது தமிழகத்தில் அக்கட்சியின் அரசியல் கணக்கு தொடங்கப்பட்டதற்கு சான்றாக அமைந்திருக்கிறது. இத்தனைக்கும் ஒவைசி தனது கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து வீடியோ பிரச்சாரம் கூட செய்யவில்லை. அதிகாரப்பூர்வ வேட்பாளர்களுக்கு கட்சியின் பி-ஃபார்ம் கொடுத்ததோடு சரி அதற்கு மேல் அவர் பெரிதாக எந்த பரப்புரையும் செய்யவில்லை.

மஜ்லிஸ் கட்சி
வாணியம்பாடியில் மஜ்லிஸ் கட்சி பெற்றுள்ள இந்த வெற்றியை தமிழகத்தில் உள்ள மற்ற இஸ்லாமிய அமைப்புகளும், தலைவர்களும் ஆச்சரியத்தோடு பார்க்கின்றனர். இனி வரும் நாட்களில் ஒவைசி தங்களுக்கு போட்டியாக உருவெடுப்பார் எனக் கருதும் அவர்கள், கட்சியின் கட்டமைப்பை வலிமைப்படுத்தும் பணிகளில் கவனம் செலுத்தத் தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நகரப் பொறுப்பாளர்
இதனிடையே வாணியம்பாடி நகராட்சியை இந்த முறை திமுக கைப்பற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது. திமுக நகரப் பொறுப்பாலர் சாரதிகுமாரும், அவரது தாயாரும் வெவ்வேறு வார்டுகளில் போட்டியிட்டு நகர்மன்ற உறுப்பினர்களாக வெற்றி பெற்றிருக்கின்றனர். திமுக நகரப் பொறுப்பாளர் சாரதிகுமாரின் தாயார் வாணியம்பாடி நகர்மன்ற தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications