"ஸ்டார்" பரப்புரையாளர்கள்.. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஆஜராவதிலிருந்து விலக்கு பெற்ற ப.சிதம்பரம்
சென்னை: தமிழக தேர்தல் பிரச்சாரத்தில் தாங்கள் நட்சத்திர பிரச்சாரகர்கள் என்று கூறி, ஐஎன்எக்ஸ் மீடியா நிதி முறைகேடு வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு பெற்றுள்ளனர் மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம்.
2007ஆம் ஆண்டு மத்திய நிதியமைச்சராக சிதம்பரம் பதவி வகித்தபோது ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டிலிருந்து சட்டத்திற்குப் புறம்பாக 305 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகளை பெற்றது என்பது குற்றச்சாட்டு. கார்த்தி சிதம்பரம் நடத்திவந்த நிறுவனத்துக்கு ஐஎன்எக்ஸ் மீடியா லஞ்சம் கொடுத்ததாக சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக 2017ஆம் ஆண்டு மே மாதம் சிபிஐ முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது.
அமலாக்கத் துறை தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
இந்த வழக்கில் அமலாக்கத்துறை துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது. இதையடுத்து சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் நேரில் ஆஜராக டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது.
வன்னியருக்கான 10.5% உள் ஒதுக்கீடு விவகாரம்- அதிமுக தலைவர்கள் மோதல் குறித்து ப. சிதம்பரம் கேள்வி
ஆனால் பிரச்சாரத்தில் தாங்கள் ஸ்டார் பிரச்சாரகர்களாக செயல்படுவதால் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையேற்று, டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து உள்ளார் நீதிபதி. இந்த வழக்கு விசாரணை ஏப்ரல் 16-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது