நாங்க ‘பாரத்’க்கு விரோதிகள் அல்ல.. ஆனால் பாஜக இந்தியாவுக்கு விரோதி.. ப.சிதம்பரம் தாக்கு!
சென்னை: நாங்கள் 'பாரத்'க்கு விரோதிகள் அல்ல, ஆனால், பாஜக இந்தியாவுக்கு விரோதமானது, பாரத் என்று நாங்கள் கூட்டணிக்கு பெயர் வைத்திருந்தால் இந்தியா என்ற பெயரை பாஜக மாற்றியிருக்காது என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம், 'இந்தியா' கூட்டணியை பார்த்து பாஜக பயப்படுவதால் இந்தியா என்ற பெயரை அக்கட்சி எதிர்க்கிறது. பாரத் என்று கூட்டணி பெயர் வைத்திருந்தால் இந்தியா என்ற பெயரை பாஜக எதிர்த்திருக்காது. பாரத் என்ற பெயரை எதிர்த்திருக்குமா என்று தெரியவில்லை.

அரசியல் சாசனத்தில் இன்று காலை வரை, இந்தியா, அதாவது பாரத், மாநிலங்கள் அடங்கிய ஓர் ஒன்றியமாக இருக்கும் என்றுதான் இருக்கிறது. பாஜகவுக்கு என்ன நோக்கம் என்று எனக்குப் புரியவில்லை. நல்ல நோக்கம் இருந்தால் இரண்டு சொற்களையும் எழுதலாம். நாங்கள் 'பாரத்'-க்கு விரோதிகள் அல்ல. ஆனால், பாஜக இந்தியாவுக்கு விரோதிகளைப் போல நடந்து கொள்கிறது. இந்தியா என்ற பெயரை மாற்ற அரசியல் சாசனத்தில் குறைந்தபட்சம் 5 திருத்தங்களையாவது செய்ய வேண்டும்.
இந்தியா முழுவதும் 7 தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில், 4 இடங்களில் பாஜகவுக்கு எதிரான கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால், பாஜகவை தேர்தலில் தோற்கடிக்க முடியாது என்ற நினைப்பை எல்லாம் அகற்றிவிட்டு எதிர்க்கட்சிகள் நம்முடைய பயணத்தைத் தொடங்க வேண்டும்.
உத்தர பிரதேசத்தில் பாஜக வேட்பாளரை 40,000 வாக்கு வித்தியாசத்தில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் வென்றது, பாஜகவை வீழ்த்த முடியும் என்பதற்கு உதாரணம். இந்தியாவில் பெரும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இன்னும் பெரிய மாற்றம் வரவேண்டும் என்று விரும்புகிறோம்." எனத் தெரிவித்துள்ளார்.
6 மாநிலங்களில் உள்ள 7 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. 2 தொகுதிகளில் இந்தியா கூட்டணி வெற்றி, கூட்டணி இன்றி காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளில் தலா 1 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. 4 தொகுதிகளில் எதிர்க்கட்சிகள் வென்ற நிலையில் 3ல் மட்டுமே பாஜக வென்றது.
இந்த இடைத்தேர்தல் முடிவால் 'இந்தியா' கூட்டணி கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர். குறிப்பாக காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் நம்பிக்கை அதிகரித்துள்ளது. பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைந்த கூட்டணியான 'இந்தியா' கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற இந்த இடைத்தேர்தல் உத்வேகமாக அமையும் எனக் கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications