விஜயகாந்த் எடுத்த முடிவுகள் எல்லாமே புரியாத புதிர்! பிரேமலதா காரணம்? பண்ருட்டி பகிர்ந்த சீக்ரெட்!
சென்னை: அரசியலில் விஜயகாந்த் ஏன் இப்படியொரு முடிவை எடுத்தார், பிறகு மாற்றினார் என்பது புரியாத புதிராகவே இருக்கும் என அவருடன் சில காலம் பயணித்த தேமுதிகவின் முன்னாள் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
எம்.ஜி.ஆருடனும் பயணித்திருக்கிறேன், விஜயகாந்துடனும் பயணித்திருக்கிறேன் என்று கூறிய பண்ருட்டி ராமச்சந்திரன், அரசியல் முடிவு எடுக்கும் போது எம்.ஜி.ஆர். மட்டும் தான் எடுப்பார் என்றும் ஆனால் விஜயகாந்த் அப்படியில்லை எனவும் எடுத்த முடிவுகள் எல்லாமே புரியாத புதிர் எனவும் கூறியுள்ளார். ஜானகியை எம்.ஜி.ஆர். அரசியல் மேடையில் ஏற்றவே மாட்டார் என்று கூறிய பண்ருட்டி ராமச்சந்திரன், சுற்றி வளைத்து சூசகமாக பிரேமலதாவை விமர்சிக்கும் வகையில் பேசியிருக்கிறார்.

தாம் சொல்லும் யோசனையையும், முடிவையும் ஏற்றுக்கொள்ளும் விஜயகாந்த் சில நேரங்களில் அந்த முடிவை மாற்றிக்கொள்வார் என்றும் அது கூட பரவாயில்லை ஜெயலலிதாவை சட்டசபையில் எதிர்க்க வேண்டாம் என தாம் சொல்லியதை அவர் கேட்கவில்லை எனவும் கூறியுள்ளா. தன் பேச்சுக்கு மதிப்பளிக்காத இடத்தில் இருந்து பழியை சுமக்க விரும்பாததால் தேமுதிகவிலிருந்து விலகியதாக தெரிவித்துள்ளார். செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு பண்ருட்டி ராமச்சந்திரன் அளித்த பேட்டியில் இதனைக் கூறியிருக்கிறார்.
அதிமுகவுடன் இணக்கமாக சென்றிருந்தால் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு விஜயகாந்த் நல்ல நிலைக்கு வந்திருக்கக் கூடும் என்றவர் விஜயகாந்தை பொறுத்தவரை மிகக் கடின உழைப்பாளி என்று கூறியுள்ளார். சுற்றுப்பயணம் செல்வதற்கும், மக்களை சந்திக்கவும் சலிக்கவே மாட்டார் விஜயகாந்த் என பண்ருட்டி தெரிவித்துள்ளர். தற்போது தமிழ்நாட்டில் பாஜக வேகமாக வளர்ந்து வருவதாகவும் அண்ணாமலை நடத்தும் என் மண் என் மக்கள் யாத்திரைக்கு பிறகு பாஜக புத்தெழுச்சி பெற்றிருப்பதாகவும் பாராட்டியுள்ளார்.
தேமுதிகவின் எதிர்காலத்தை பற்றி தாம் கருத்துச் சொல்ல விரும்பவில்லை என்றவர் விஜயகாந்த் மறைவுக்கு திரண்ட கூட்டம் அவர் மீதான அனுதாபத்தால் வந்தது என்று தெரிவித்துள்ளார். இதனிடையே தேமுதிக ஆரம்பிக்கப்பட்டது முதல் விஜயகாந்தின் அரசியல் ஆலோசகர்போல் செயல்பட்டு வந்தவர் பண்ருட்டி ராமச்சந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications