தவெக விஜய்க்கு பண்ருட்டி ராமசந்திரனின் எம்ஜிஆர் அதிமுக ஆதரவு! பூனைக்குட்டி வெளியே வந்துடுச்சி!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வரும் தேர்தலில் வென்று ஆட்சிக்கு வர வேண்டும் என பண்ருட்டி ராமசந்திரன் கட்சியான எம்ஜிஆர் அதிமுகவின் பொதுச் செயலாளர் ரஞ்சித் குமார் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் நடந்த எம்ஜிஆர் அதிமுக கட்சி தொடக்க விழா கூட்டத்தில் அவர், பண்ருட்டி ராமசந்திரன் முன்பு இவ்வாறு பேசியுள்ளார். இந்த கூட்டத்தில் ரஞ்சித்குமார் பேசுகையில், மூன்றெழுத்து கட்சிதான் ஆட்சிக்கு வரும் என சொன்னேன்.

1977 ஆம் ஆண்டு எம்ஜிஆர் ஆட்சிக்கு வந்தார். அவரை போல் மூன்று எழுத்து கொண்ட விஜய் வரும் தேர்தலில் நிச்சயம் ஆட்சிக்கு வருவார். ஊழலற்ற ஆட்சியை தருவேன் என விஜய் கூறுவதால் அவரது கட்சிக்கு ஆதரவு தருவோம்.
ஒரு முறை வாய்ப்பு வழங்கிதான் பார்ப்போமே என அவர் தெரிவித்துள்ளார். மாற்று கட்சிகளை கொண்ட நிறைய பேர் இந்த இயக்கத்தில் இணைத்துக் கொண்டுள்ளீர்கள். தயவு செய்து ஊழலற்ற கட்சிகளுக்கு ஓட்டு போடுங்கள் என்றும் ரஞ்சித் குமார் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியலில் நீண்டகால அனுபவம் கொண்ட மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான பண்ருட்டி எஸ். ராமச்சந்திரன் (88) சென்னையில் புதிய அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்கியுள்ளார்.
கட்சியின் பெயர் எம்ஜிஆர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (MGR Anna Dravida Munnetra Kazhagam - MGR ADMK) என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 19-ஆம் தேதி சென்னையில் நிருபர்களைச் சந்தித்த பண்ருட்டியார், "ஒருபுறம் அடையாள அரசியல், மறுபுறம் கொள்கை அரசியல் சூறாவளியாக அடித்து வருகிறது. இதனால் அனைவருக்கும் வாய்ப்பு அளிக்கும் வகையில் புதிய இயக்கத்தைத் தொடங்குகிறோம்.
சாதி, சமயம், மதத்தைத் தாண்டி புதிய சமுதாயத்தை உருவாக்குவதே எங்கள் குறிக்கோள்" என்று கூறினார்.
இந்தக் கட்சி 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடாது என்று தெளிவாகத் தெரிவித்துள்ளார். கட்சி உறுப்பினர்கள் தங்கள் விருப்பப்படி வேறு கட்சிகளுடன் கூட்டணி வைத்து செயல்படலாம் எனவும் கூறியுள்ளார்.
கட்சியின் அதிகாரப்பூர்வ தொடக்க விழா பிப்ரவரி 23-ஆம் தேதி காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. கருப்பு, வெள்ளை, சிவப்பு நிறங்களைக் கொண்ட கொடி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது அதிமுக கொடியை போல் தோற்றமளிக்கிறது.
பண்ருட்டி ராமச்சந்திரன் , எம்ஜிஆர் காலத்தில் அதிமுகவில் அமைச்சராகப் பதவி வகித்தவர். பின்னர் திமுக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளில் பணியாற்றியவர். சமீப காலமாக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்)-ஐ ஆதரித்து வந்தார். ஆனால், "ஓபிஎஸ் அத்தியாயம் முடிந்துவிட்டது. அவரை நம்பி வாழ்நாளை வீணடிக்க முடியாது" என்று கூறி அணியிலிருந்து விலகியுள்ளார்.
இந்தப் புதிய கட்சி தொடக்கம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிலர் இதை எம்ஜிஆர் - அண்ணா கொள்கைகளை மீட்டெடுக்கும் முயற்சி எனக் கருதுகின்றனர். மேலும், தற்போதைய அரசியல் சூழலில் (திமுக vs தவெக போட்டி) இது புதிய மாற்றத்தை ஏற்படுத்துமா என்பது கவனிக்கத்தக்கது.
பண்ருட்டியாரின் 70 ஆண்டுகால அரசியல் பயணத்தில் இது ஒரு புதிய அத்தியாயமாக அமைந்துள்ளது! இவரது இயக்கம் தேர்தலில் போட்டியிடாவிட்டாலும் விஜய் கட்சிக்கு ஆதரவளிக்கும் என பலர் தெரிவித்தனர்.
அந்த வகையில் அண்மையில் ஒரு செய்தி சேனலுக்கு பேட்டி அளித்த பண்ருட்டி ராமசந்திரன், அதிமுக தன் தனித்துவத்தை படிப்படியாக இழந்து வருகிறது. அதிமுக இடத்தை விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் பிடித்துவிட்டது.
முதலில் அதிமுக இடத்தை பாஜக பிடிக்க நினைத்தது. ஆனால் இடையில் புகுந்து விஜய் அந்த இடத்தை பிடித்துக் கொண்டார். எம்ஜிஆர், ஜெயலலிதாவை மையப்படுத்தி பேசி வருகிறார் விஜய். தமிழத்தில் திமுக - தவெக இடையே தான் தற்போது போட்டி இருக்கிறது. நாளுக்கு நாள் விஜய்க்கு மக்கள் செல்வாக்கு கூடிக் கொண்டே இருக்கிறது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications