ஓபிஎஸ்+ இபிஎஸ்+ சசிகலா+ டிடிவி.. இணைந்தாலும் அதிமுகவுக்கு வெற்றி இல்லை.. பண்ருட்டியார் பகீர்
சென்னை: ஓபிஎஸ், இபிஎஸ், சசிகலா இணைந்தாலும் அதிமுக வெற்றி பெறாது என மூத்த அரசியல்வாதியும் ஓபிஎஸ் அணியில் இணைந்தவருமான பண்ருட்டியார் ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அமைச்சரவையில் முக்கிய துறையை தன் கையில் வைத்திருந்தவர் பண்ருட்டி ராமசந்திரன். இவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடனும் பயணித்துள்ளார். எம்ஜிஆர் காலமான பிறகு ஜெயலலிதாவுடன் பயணித்த அவருக்கு சில மனக்கசப்புகள் ஏற்பட்டதால் அரசியலிலிருந்து ஒதுங்கியே இருந்தார்.
இந்த நிலையில் விஜயகாந்த் தேமுதிக தொடங்கியதும் அரசியல் ஆலோசகராக இருந்தார். இந்த நிலையில் அங்கும் கட்சியின் கொள்கை முடிவுகள் எடுப்பதில் ஏற்பட்ட சில மனக்கசப்புகளால் அவர் அங்கிருந்தும் வெளியேறி விட்டார்.

ஜெயலலிதா
பிறகு ஜெயலலிதா முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைந்தார். அங்கும் எந்த பொறுப்புகளும் இன்றி ஓரங்கட்டப்பட்ட நிலையிலேயே இருந்தார். தற்போது அதிமுக பிளவுப்பட்டு இருக்கும் நிலையில் சசிகலா முதலில் பண்ருட்டி ராமசந்திரனை நேரில் போய் சந்தித்தார். இதையடுத்து ஓபிஎஸ்ஸும் அவரை போய் சந்தித்தார்.

ஓபிஎஸ் ஆதரவாளர்
தற்போது ஓபிஎஸ் ஆதரவாளராக பண்ருட்டி ராமசந்திரன் இருந்து வருகிறார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு கூட பண்ருட்டி ராமசந்திரந் தலைமையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் எடப்பாடியாரை பண்ருட்டியார் கடுமையாக விமர்சித்திருந்தார். அதிமுகவின் தொடர் தோல்விக்கு எடப்பாடி பழனிசாமியே காரணம் என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் பண்ருட்டி ராமசந்திரன் தனியார் தொலைகாட்சிக்கு பேட்டி அளித்திருந்தார். அதில் சட்டசபை தேர்தல்களில் 130, 140 தொகுதிகளில் வெற்றி பெற்ற அதிமுக கீழே வந்திருக்கிறது. இதுதான் ஜெயித்ததாக அர்த்தமா, தேர்தலை நாம் வழிநடத்திச் சென்று தொடந்து தோல்விகளை சந்திக்கிற போது நமக்கு இது ஒத்து வராது, யாராவது நடத்துங்க, நான் கூட இருந்து வழி காட்டுகிறேன் என எடப்பாடி சொல்லியிருக்க வேண்டும்.

கட்சிக்கு நல்லது
அப்படி சொல்லியிருந்தால் கட்சிக்கு நல்லது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் அடுத்த தேர்தலை அதிமுக சந்தித்தால் அதிமுக தோல்வியைதான் தழுவும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர் செல்வம், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் 4 அணிகளாக பிரிந்து கிடக்கிறார்கள். இவர்கள் எல்லாம் ஒன்றிணைந்தால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இவர்கள் ஒன்றிணைய வேண்டும்.

ஒன்றிணைந்தால்
ஒன்றிணைந்தால் நிச்சயம் அதிமுகவுக்கு வெற்றி கிடைக்கும். இவர்கள் ஒன்றிணைய வேண்டும் என கூட்டணியில் இருக்கும் பாஜக அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் அனைத்து அணிகளும் சேர்ந்து கொள்வதால் மட்டுமே வெற்றி கிடைக்காது. மறுபடியும் மக்களின் ஆதரவை பெறுவதற்கான திட்டங்களை வகுத்து செயல்பட வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் வெற்றி கிடைக்கும். இவ்வாறு பண்ருட்டி ராமசந்திரன் தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications