"எல்லாம் சரி... இளநீரை ஸ்ட்ரா இல்லாம எப்படி குடிப்பீங்க?.. இதோ இப்படிதான்"
இளநீர் குடிக்க பப்பாளி இலை தண்டு ஸ்ட்டிரா மக்களிடையே பிரபலமாகி வருகிறது.
சென்னை: நம்ம ஆளுங்க மூளையே தனிதான்... சின்ன விஷயம் என்றாலும் பெரிய விஞ்ஞானி ரேஞ்சுக்கு போய் யோசிச்சு எல்லாரையுமே திரும்பி பார்க்க வெச்சிடறாங்க!!
பிளாஸ்டிக்கை பயன்படுத்த கூடாது என்று அரசு உத்தரவிட்டு விட்டது. பெரிய பெரிய வியாபாரிகள், கடைகளுக்குதான் இந்த உத்தரவு பெருமளவு செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஏனெனில் இவர்கள்தான் பெருமளவு பிளாஸ்டிக் பைகளை பொதுமக்களுக்கு தங்கள் பொருட்களுடன் சேர்த்து தந்ததால், இந்த சட்டம் கடுமையாகப்பட்டது. ஆனால் எதிர்பாராத விதமாக, இந்த விஷயத்தில் அடித்தட்டு மக்கள் ஆதரவாக இருந்து வருகிறார்கள். பிளாஸ்டிக்கை எந்த ரூபத்தில் இருந்தாலும் அதை ஒழிக்க அக்கறை காட்டுகிறார்கள்.
இளநீர் வியாபாரி
நடைபாதை வியாபாரிகள், சிறு கடைகள் வைத்திருப்போர்கள்தான் அரசின் விழிப்புணர்வில் பங்கேற்கிறார்கள் என்று பார்த்தால், சைக்கிளில் வியாபாரம் செய்யும் ஒருவரும் இதில் பங்கெடுத்துள்ளது ஆச்சரியத்தை அளிக்கிறது. இவர் ஒரு இளநீர் வியாபாரி. ஸ்ரீவைகுண்டம் வசவப்புரம் பகுதியில் சைக்கிளில் சென்றுதான் இளநீரை தெரு தெருவாக விற்று வருகிறார்.
யாருமே யோசிக்கவில்லை
இளநீரின் மேற்புறத்தை வெட்டி தரும்போது, கூடவே உறிஞ்சி குடிக்க ஸ்ட்ராவும் தரப்படும். ஆனால் பிளாஸ்டிக்கின் உபயோக பொருட்கள் ஆகட்டும், உணவு பொருட்களாகட்டும், அதற்கெல்லாம் மாற்றாக வாழை, தாமரை இலைகள், மண்பாண்டம், துணி பைகள் என இருக்கும்போது, இந்த பிளாஸ்டிக் ஸ்ட்ராவுக்கு ஒரு மாற்று குறித்து மட்டும் யாருமே பெரிதாக யோசிக்கவில்லை.
மாற்று ஸ்ட்ரா
ஆனால் இதற்காக தானே ஒரு ஐடியாவை கண்டுபிடித்திருக்கிறார் இந்த இளநீர் வியாபாரி. பிளாஸ்டிக் ஸ்ட்ராவுக்கு பதிலாக பப்பாளி இலையின் தண்டினை வழங்கி வருகிறார். பிளாஸ்டிக் ஸ்டிரா என்பது சிறிய பொருள் என்றாலும், அதற்கு மாற்று என்பது அரிதான ஒன்றுதான்.
பேப்பர் ஸ்ட்டிரா
பேப்பர் ஸ்டிரா பயன்படுத்தலாம் என்று இதற்கு முன்பு அறிவுறுத்தப்பட்டது. என்றாலும் பேப்பர் ஸ்ட்ராவைவிட, பப்பாளி மரத்தின் இலையின் தண்டினை ஸ்ட்ராபோல் உபயோகிப்பது மேலும் உடலுக்கு வலுவையும் ஆரோக்கியத்தையும் தரும் என்பதுதான் உண்மை.
இதுதான் நிஜமான விழிப்புணர்வும்கூட!! அந்த விதத்தில் இந்த சைக்கிள் இளநீர் வியாபாரிக்கு நமது கோடி நன்றிகள்!!