திமுகவுக்கு படையெடுக்கும் மாற்றுக்கட்சி தலைகள்.. 100+ எஸ்டிபிஐ கட்சியினர் திடீர் முடிவு!
சென்னை: சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், கட்சி மாறும் படலங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், தென்காசி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி முன்னிலையில், எஸ்.டி.பி.ஐ. கட்சியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்.
தென்காசி மாவட்ட எஸ்.டி.பி.ஐ கட்சியினர் திமுகவில் இணைந்த இந்த நிகழ்ச்சியில் தென்காசி தெற்கு திமுக மாவட்ட செயலாளர் வே.ஜெயபாலன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

2026 சட்டசபை தேர்தல் நெருங்கி வருகிறது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தேர்தலையொட்டி, தங்களுக்கான ஆதரவு தளத்தை விரிவுபடுத்துவதில் அனைத்துக் கட்சிகளுமே தீவிரம் காட்டி வருகின்றன.
மாற்று கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கட்சி தாவும் படங்கள் அதிகரித்து வருகின்றன. அண்மைக்காலமாக அதிமுகவைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பலர் திமுகவில் இணைந்தனர். அன்வர் ராஜா, மனோஜ் பாண்டியன், மருது அழகுராஜ், மைத்ரேயன், சின்னச்சாமி என அதிமுக பிரமுகர்கள் பலர் அண்மையில் திமுகவில் இணைந்தனர்.
மேலும், ஈரோடு மாவட்ட அதிமுகவில் அசைக்க முடியாத நபராக இருந்து வந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அண்மையில் தவெகவில் இணைந்தார். அவருடன் அதிமுக முன்னாள் எம்.பி சத்தியபாமா உள்ளிட்ட பலரும் தவெகவில் இணைந்தனர். நாஞ்சில் சம்பத் அண்மையில் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார்.
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலும் மாற்றுக் கட்சியினர் கட்சி தாவும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆளுங்கட்சியான திமுக, மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்தவர்களை தங்கள் பக்கம் சேர்த்து வருகிறது.
அந்த வகையில், தென்காசியைச் சேர்ந்த எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகிகள் 100 பேர், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளனர். முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதம், அதிமுக கூட்டணியில் இருந்து எஸ்டிபிஐ கட்சி வெளியேறியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications