தீபாவளி மகிழ்ச்சிக்கான கருவி! போட்டி, பொறாமை, பகைமை, வெறுப்பு விலக வேண்டும்! பாமக வாழ்த்து!
சென்னை: தீபஒளித் திருநாள் என்பது மகிழ்ச்சிக்கான கருவி என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
மக்களுக்கு மகிழ்ச்சி நிலைக்க வேண்டும் என்றால் இல்லாமை கூடாது என்றும் இல்லாமையை விரட்டுவதற்கு கல்வியும், வேலைவாய்ப்பும் கட்டாயம் எனவும் ராமதாஸ் தனது தீபாவளி வாழ்த்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேபோல் பாமக தலைவர் அன்புமணி விடுத்துள்ள தீபாவளி வாழ்த்தில், போட்டி, பொறாமை, பகைமை, வெறுப்பு போன்றவை விலக வேண்டும் எனக் கூறியுள்ளார்.

ராமதாஸ் வாழ்த்து
மத்தாப்புகளின் திருவிழாவான தீபஒளித் திருநாளை உற்சாகமாகக் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த தீபஒளித் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மனிதன் ஒரு சமூக விலங்கு. மனிதர்களால் தனித்து வாழ முடியாது. மனிதர்கள் தங்களின் உறவுகள், நண்பர்களுடன் ஒன்று கூடவும், மகிழ்ச்சியடையவும் குறிப்பிட்ட கால இடைவெளியில் கொண்டாட்டங்கள் அவசியமாகும். அதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தருவதற்காகத் தான் தீபஒளித் திருநாள் போன்ற கொண்டாட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவ்வகையில் தீபஒளித் திருநாள் மகிழ்ச்சிக்கான கருவி.

சமூகநீதிக்கு சறுக்கல்
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களில் சமூகநீதிக்கும் சறுக்கல்கள் ஏற்பட்டன. மக்கள் முன்னேறவும், சமத்துவத்தை உண்டாக்கவும் சமூகநீதி மிகவும் அவசியமாகும். சமூகநீதியின் ஒளியை சதிகார கூட்டத்தின் கைகள் தடுத்து நின்றாலும் மறைக்க முடியாது. சதிகளால் சறுக்கலுக்கு உள்ளான சமூகநீதி, கிரகணத்தை விலக்கி ஒளிவிட ஆயத்தமாகி வருவதை அறிந்து கொள்ள முடிகிறது.

இல்லாமை கூடாது
மக்களுக்கு மகிழ்ச்சி நிலைக்க வேண்டும் என்றால் இல்லாமை கூடாது. இல்லாமையை விரட்டுவதற்கு கல்வியும், வேலைவாய்ப்பும் கட்டாயமாகும். கல்வி, வேலைவாய்ப்பு மட்டுமின்றி, சமூகநீதி, அமைதி, வளம், வளர்ச்சி, ஒற்றுமை, நல்லிணக்கம், சகோதரத்துவம், பன்முகத்தன்மை உள்ளிட்ட பெருகவும், மக்களின் வாழ்வில் இல்லாமை இருள் விலகி இன்ப ஒளி நிறையவும் நெஞ்சம் நிறைந்து வாழ்த்துகிறேன்.

அன்புமணி ராமதாஸ் வாழ்த்து
கொண்டாட்டங்கள் எப்போதும் மகிழ்ச்சியானவை; அனைவராலும் விரும்பப்படுபவை. அத்தகையக் கொண்டாட்டங்களில் தீப ஒளிக்கு சிறப்பான இடம் உண்டு. தீபஒளித் திருநாள் என்றாலே மகிழ்ச்சியும், கொண்டாட்டமும் தான் நினைவுக்கு வரும். புத்தாடை அணிந்து, மத்தாப்புக் கொளுத்தி, பிற மத நண்பர்களுக்கும், அண்டை வீட்டாருக்கும் இனிப்பு வழங்கும் வழக்கம் நட்பை வலுப்படுத்துவதுடன், நல்லிணக்கத்தையும் தழைக்கச் செய்கிறது. இது தான் தீப ஒளித் திருநாளின் சிறப்பு ஆகும்.

போட்டி, பொறாமை வேண்டாம்
நட்பையும், நல்லிணக்கத்தையும் வளர்க்கும் தீபஒளித் திருநாள் இனி வரும் ஆண்டுகள் அனைத்தும் மகிழ்ச்சியையும், வளர்ச்சியையும் மட்டுமே வழங்க வேண்டும். அதற்கு தமிழகத்தில் உழவும், தொழிலும் சிறக்க வேண்டும். தமிழ்நாடும், தமிழ்நாட்டு மக்களும் முன்னேற வேண்டும். மக்களிடையே அன்பு, நட்பு, நல்லிணக்கம், சகோதரத்துவம் ஆகியவை மலர வேண்டும்; போட்டி, பொறாமை, பகைமை, வெறுப்பு போன்றவை விலக வேண்டும் என்று கூறி மீண்டும் ஒரு முறை தீப ஒளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.












Click it and Unblock the Notifications