விஜய்யிடம் நான் பேசினேனா? அவரை பார்த்தே 20 வருஷம் ஆகுது.. போட்டு உடைத்த பவன் கல்யாண்
சென்னை: விஜய்யை என்.டி.ஏ கூட்டணிக்குள் கொண்டு வர பாஜக பவன் கல்யாணை வைத்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் பரவியது. இந்த நிலையில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யான் இதற்கு விளக்கம் அளித்துள்ளார். விஜய்யை சந்தித்தே 20 வருஷங்கள் ஆகிறது. அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினேன் என்பதால் உண்மையில்லை. இந்த தகவல் எப்படி பரவியது என்றே எனக்கு தெரியவில்லை என்று கூறியுள்ளார்.
தவெக தலைவர் விஜய்யை அதிமுக - பாஜக கூட்டணிக்குள் கொண்டு வர பாஜக தலைமை தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாக பரவலாக பேசப்படுகிறது. சிபிஐ விசாரணைக்காக விஜய் டெல்லி சென்ற நிலையில், பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியிருப்பதாகவும் பிரபல ஆங்கில செய்தி நிறுவனமான இந்தியா டுடே செய்தி வெளியிட்டு இருந்தது.

என்.டி.ஏ கூட்டணியில் விஜய்?
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் கட்சிக்கு 80 தொகுதிகளில், கூட்டணி வெற்றி பெற்றால் துணை முதல்வர் பதவியும், ஒருவேளை மிக அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்றால் எதிர்க்கட்சி தலைவர் பதவி வகிக்கலாம் என்று கூட விஜய்க்கு ஆஃபர் வழங்கியதாக தகவல் வெளியானது.
இதற்காக விஜய்யிடம் பல்வேறு வழிகளிலும் பாஜக மறைமுக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும், தென்னிந்தியாவை சேர்ந்த துணை முதல்வர் ஒருவர் இதற்கான பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. அது ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் என்றும் அவர் நேரடியாக விஜய்யிடம் பேசியதாகவும் கூறப்பட்டது.
பவன் கல்யாண் பதில்
திமுக கூட்டணிக்கு எதிரான வாக்குகளை பிரிந்தால் தேசிய ஜனநாயாக கூட்டணி வெற்றி பெறுவது கடினம் என்பதால், எந்த வாய்ப்பையும் விடக்கூடாது என்பதில் பாஜக தலைமை சீரியஸ் ஆக இருப்பதாகவும், இதற்கு விஜய்யின் தவெக சம்மதித்ததாகவும் தகவல் வெளியானது. எடப்பாடி பழனிசாமி தான் சம்மதம் தெரிவிக்கவில்லை என்று கூறப்பட்டது. இன்னும் இரண்டு நாட்களில் கூட்டணி உறுதியாகும் எனவும் பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தான் நான் விஜய்யிடம் பேசியே 20 வருஷங்கள் ஆவதாக ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கூறியுள்ளார். தனியார் தொலைக்காட்சி நேர்காணலில் பங்கேற்ற பவன் கல்யாணிடம் பல்வேறு கேள்விகள் முன் வைக்கப்பட்டன. "கடந்த ஒரு வாரமாக ஒரு செய்தி பரவி வருகிறது. என்.டி.ஏ கூட்டணியில் இணைய விஜய்யிடம் பேச்சுவார்த்தை நடத்துனீர்களா? என கேட்கப்பட்டது.
விஜய்யை சந்தித்தே 20 ஆண்டு ஆச்சு
அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல. நான் பேசவே இல்லை. நானும் அந்த செய்தியை கேள்விப்பட்டேன். எதற்கு இப்படி அந்த செய்தி பரவியது என்றே தெரியவில்லை... நான் விஜய்யை சந்தித்தே 20 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. சமீபத்தில் நான் விஜயிடம் பேச வில்லை. எங்களுக்குள் எந்தவித தொடர்பும் இல்லை" என்று கூறினார்.
இதேபோல் என்.டி.ஏ கூட்டணி தான் இப்போதைய நேரத்திற்கு விஜய்க்கு சரியான இடமாக இருக்குமா? என்ற கேள்விக்கு பதில் அளித்த பவன் கல்யான், "எனக்கு தெரியவில்லை. கூட்டணி என்பது கட்சி தலைவர்களை மட்டும் கொண்டது கிடையாது. அது அவர்களின் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களின் ஆதரவால் அமைவது. எனவே அது தனிப்பட்ட விஷயம் கிடையாது" என பதில் அளித்தார்.












Click it and Unblock the Notifications